பணம் திரும்ப தந்த ஒரு வழக்கை சொல்லுங்கள்: பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு ஐகோர்ட் கேள்வி

2


சென்னை: 'பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் வரலாற்றில், நிதி மோசடி வழக்கில் விசாரணை விரைவாக முடிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப அளிக்கப்பட்டதாக ஏதாவது ஒரு சம்பவம் உண்டா' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.


சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த, 'தி மயிலாப்பூர் இந்து பெர்மனன்ட் பண்ட்' என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த, 100க்கும் மேற்பட்ட முதலீட்டார்களிடம், பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அந்நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் உட்பட ஆறு பேரை, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஜாமின் கோரி மூன்றாவது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில், தேவநாதன் மனு தாக்கல் செய்திருந்தார். நீதிபதி ஜெயசந்திரன் முன் நேற்று, இம்மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, 'தேவநாதனுக்கு ஜாமின் வழங்கினால், அவர் சாட்சிகளை கலைக்கக் கூடும்' என, பொருளாதார குற்றப்பிரிவு வழக்கறிஞர் வாதிட்டார்.



இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, 'ஓராண்டுக்கு மேல் தேவநாதனை சிறையில் அடைத்து வைத்துள்ள போதிலும், விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.பொருளாதார குற்றப்பிரிவு வரலாற்றில், வழக்கை விரைந்து விசாரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திரும்ப பெற்று கொடுத்ததாக ஒரு வழக்கையாவது கூறுங்கள்' என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, பொருளாதார குற்றப்பிரிவுக்கு கண்டனம் தெரிவித்தார்.



பின், தேவநாதன் தரப்பில், 'ஆறு வாரம் காலம் இடைக்கால ஜாமின் வழங்கினால், சொத்துக்களை விற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப ஒப்படைக்கப்படும்' என்று, தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, 'தேவநாதன் தனக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் ரொக்கங்கள் குறித்த விபரங்களை, வரும் 25ம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.


இதில், ஒரு சென்ட் நிலம் அல்லது ஒரு ரூபாயை மறைத்தாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து, அன்றைய தினம் முடிவெடுக்கப்படும்' எனக்கூறி, வழக்கை ஒத்திவைத்தார்.

Advertisement