சிக்னலில் நின்ற வாகனங்களில் பேருந்து மோதி இருவர் காயம்

படப்பை, கரசங்கால் சந்திப்பு சிக்னலில் நின்ற இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு வேன் மீது பேருந்து மோதியதில், இருவர் காயமடைந்தனர்.

வண்டலுார் - வாலாஜாபாத் சாலை கரசங்கால் சந்திப்பு சிக்னலில், படப்பை மார்க்கமாக செல்வதற்கு, நேற்று மதியம் ஏராளமான வாகனங்கள் நின்றன.

அப்போது, மண்ணிவாக்கத்தில் இருந்து படப்பை நோக்கி சென்ற தனியார் நிறுவன பேருந்து ஒன்று, சிக்னலில் நின்றிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள், ஒரு வேன் மீது மோதியது.

இதில், இருசக்கர வாகனங்களில் வந்த, படப்பையைச் சேர்ந்த தேவி, 35, கணேசன், 30, ஆகிய இருவரும் துாக்கி வீசப்பட்டு, காயமடைந்தனர்.

ஒரு இருசக்கர வாகனம், பேருந்து அடியில் சிக்கி, ஒரு கி.மீ., துாரம் இழுத்துச் செல்லப்பட்டதில், அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் ஓடிவந்து, தீயணைக்கும் கருவியால், தீயை அணைத்தனர்.

காயம் அடைந்தவர்கள், '108' ஆம்புலன்ஸ் மூலம், குரோம்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து, தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement