அதிமுகவுக்கு இரட்டை நிலைப்பாடு என்பது சாதாரணம்: முதல்வர் ஸ்டாலின் தாக்கு

23

சென்னை: ''எப்பொழுது இரட்டை நிலைப்பாடு என்பது அதிமுகவுக்கு சாதாரணம் தான்'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ரகுமான் கான் எழுதிய நூல்களை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சட்டசபையில் ரகுமான் கானின் உரை இடி முழக்கமாக இருந்தது. என்னைப் பொறுத்தவரையில் ரகுமான் கான் ஸ்டார் பேச்சாளர். சட்டசபையில் திமுகவை காத்த மூவர் துரைமுருகன், சுப்பு, ரகுமான் கான். அதிமுக ஒரு விஷயத்தில் இரட்டை நிலைப்பாட்டை எடுத்தது. எப்பொழுது இரட்டை நிலைப்பாடு என்பது அதிமுகவுக்கு சாதாரணம் தான்.

இரட்டை போக்கு



இது பற்றி சட்டசபையில் பேசிய ரகுமான் கான் என்ன சொன்னார் என்றால், சின்னமும் இரட்டை இலை, அதனால் இரட்டை போக்கு என்று சொன்னார். இதற்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை. நேற்று பார்லிமென்டில் நாட்டை சர்வாதிகாரத்திற்கு நோக்கி நகர்த்த ஜனநாயக அமைப்புகளை வைத்து, பதவி நீக்கம் செய்ய ஒரு கருப்பு சட்டத்தை கொண்டு வந்து இருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர். இதற்கு முன்னாடி குடியுரிமை திருத்த சட்டம், வக்பு திருத்த சட்டம் என சிறுபான்மையினருக்கு எதிராக பல்வேறு சட்டங்களை எல்லாம் கொண்டு வந்தார்கள்.

ஜனநாயக பாதையில்...!




அப்போது எல்லாம் திமுக சார்பில் எப்படி கடுமையாக எதிர்த்தோமோ, அதே மாதிரி இந்த கருப்பு சட்டத்தை எதிர்ப்போம். இதனை எல்லாம் மக்கள் பிரச்னையில் இருந்து திசை திருப்புவதற்கு செய்கிறார்கள். மக்களுடைய கவனத்தை மட்டுமல்ல, நாட்டையே ஜனநாயக பாதையில் இருந்து திசை திருப்புவதற்காக செய்கிறார்கள். சிறுபான்மையினர் மக்களுக்கு திமுக துணை நிற்கும். திமுக இருப்பது உங்களுக்காக தான். சமுதாயத்திற்கு தான். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement