'ஆன்லைன்' சூதாட்டங்களுக்கு தடை: ராஜ்யசபாவில் நிறைவேறியது மசோதா

4


புதுடில்லி: பணம் வைத்து விளையாடும், 'ஆன்லைன்' விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் வகையிலான, 'ஆன்லைன் கேமிங்' ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்ட மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. இது சட்டமானால், விதிகளை மீறுவோருக்கு மூன்று ஆண்டுகள் சிறை அல்லது 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.


நம் நாட்டில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, 'ஆன்லைன்' விளையாட்டுகளுக்கு அடிமையாகியுள்ளனர். பணம் வைத்து விளையாடப்படும் ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கிய பலர், தங்கள் சேமிப்பை இழந்ததுடன், தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்துள்ளன. ஆன்லைன் சூதாட்டங்களால் ஆண்டுதோறும் 45 கோடி பேர், 20,000 கோடி ரூபாய் வரை இழப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆன்லைன் விளையாட்டுகளை கட்டுப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

ஒப்புதல்



ஆன்லைன் கேமிங் தளங்களுக்கு 2023ல் மத்திய அரசு, 28 சதவீதம் ஜி.எஸ்.டி., விதித்தது. நடப்பு நிதியாண்டு முதல், ஆன்லைன் விளையாட்டுகளில் இருந்து கிடைக்கும் வெற்றி தொகைகளுக்கு 30 சதவீத வரி விதிக்கப்படுகிது. சட்டவிரோதமாக செயல்படும் பெட்டிங் கேம்கள் கிரிமினல் குற்றமாக அறிவிக்கப்பட்டது. இதற்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.


இதைத் தொடர்ந்து, ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை மற்றும் முறைப்படுத்துதல் சட்ட மசோதா லோக்சபாவில் நேற்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தாக்கல் செய்த மசோதா விவாத்துக்கு பிறகு ரல் ஓட்டெடுப்பின் வாயிலாக நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலுக்கு பிறகு, இம்மசோதா சட்டமாகும்.

அபராதம்



இந்த மசோதா சட்டமானால், ஆன்லைன் சூதாட்டம் நடத்துபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.


இ - ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகளில், பரிசு மற்றும் டிராபி ஆகியவற்றை மட்டுமே வழங்க வேண்டும் என்ற நிலை ஏற்படும்.


சூதாட்டச் செயலிகளை பிரபலங்கள் விளம்பரப்படுத்த தடை, செயலிகளை தடை செய்வது உள்ளிட்டவை அமலுக்கு வரும்.


விதிகளை மீறி விளம்பரம் செய்தால், இரண்டு ஆண்டுகள் சிறை, 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மசோதாவில் கூறப்பட்டு உள்ளது.


இந்த குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்தால், ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 2 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தடை



ஆன்லைன் விளையாட்டுகளுக்கு பணம் அனுப்பும் பரிவர்த்தனைகளை வங்கிகளும், நிதி நிறுவனங்களும் அனுமதிக்கக்கூடாது என, மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு காரணமாக, ஆன்லைன் கேம்களால் பணம் வசூலிக்க முடியாத நிலை உருவாகும்.


பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு, இது மறைமுகமாக தடையை ஏற்படுத்தும்.


ஆன்லைன் பேன்டசி விளையாட்டுகள் முதல் போக்கர், ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்டம் மற்றும் ஆன்லைன் லாட்டரி ஆகியவை இந்த மசோதா வாயிலாக தடை செய்யப்படும்.

Advertisement