கைவிடப்பட்ட கனிம குவாரிகள் அடையாளம் காணும் பணி தீவிரம்

மதுரை: தென்மாவட்டங்களில் கைவிடப்பட்ட கல்குவாரிகளை சுற்றிலும் வேலி அமைக்க நடவடிக்கை கோரிய வழக்கில், அவற்றை அடையாளம் காணும் பணி நடக்கிறது என அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை சத்தியமூர்த்தி தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் கைவிடப்பட்ட கனிம குவாரிகளில் தேங்கும் மழை நீரில் மனிதர்கள், கால்நடைகள் மூழ்கி இறப்பது தொடர்கிறது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கடமை. குவாரி நடத்த உரிமம் பெறும் குத்தகைதாரர்களிடமிருந்து பசுமை நிதியை கனிமவள விதிகள்படி வசூலிக்க வேண்டும். அதை கைவிடப்பட்ட குவாரிகளை மறுசீரமைக்க பயன்படுத்த வேண்டும்.

குவாரி நடவடிக்கை களுக்குப் பின் மறுசீரமைப்பு வழிகாட்டுதல்களை ஐ.நா.,வின் சுற்றுச்சூழல் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி குவாரிகளில் மழைநீர் உட்புகுதல் உட்பட பல்வேறு விளைவுகளை ஆய்வு செய்வது அரசின் கடமை. மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கைவிடப்பட்ட குவாரிகளை மறுசீரமைக்க விதிகள்படி குழு அமைக்க வேண்டும். அக்குழு குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கைவிடப்பட்ட குவாரிகளை சுற்றிலும் வேலி அமைக்க வேண்டும். குவாரி குத்தகை உரிமம் பெற்றவர்கள் பசுமை நிதி செலுத்தியதை உறுதி செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.

மனுதாரர் தரப்பு: மதுரை மாவட்டத்தில் 3 கோடியே 46 லட்சம் ரூபாய் பசுமை நிதி வசூலிக்கப்பட்டது. கைவிடப்பட்ட குவாரிகளில் வேலி அமைக்கவில்லை. மனித உயிர்கள் பலியாவது தொடர்கிறது.

அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா.கதிரவன்: கைவிடப்பட்ட குவாரிகளை சுற்றிலும் வேலி அமைக்க பசுமை நிதியை விடுவிக்க ஏப்., 22ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி திட்ட மதிப்பீடு தயாரித்தல் உள்ளிட்ட இதர நடைமுறைகளை பின்பற்றுவது குறித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது.

கைவிடப்பட்ட குவாரி களை அடையாளம் காணும் பணி நடக்கிறது. பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை.

இவ்வாறு விவாதம் நடந்தது.

நீதிபதிகள் 2 வாரங்கள் அவகாசம் அளித்தனர்.

Advertisement