ரூ.13 ஆயிரம் கோடி திட்டங்கள்; பீஹாரில் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

1


கயாஜி: பீஹார் மக்களுக்கு எதிரான காங்கிரஸின் வெறுப்பை யாரும் மறக்க முடியாது என்று ரூ.13,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பீஹார் சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி 2வது முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். திறந்தவெளி வாகனத்தில் சென்ற பிரதமர் மோடிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருடன் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரியும் உடனிருந்தனர்.

கயாஜியில் நடந்த நிகழ்ச்சியில் ரூ.13,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும், வடக்கு மற்றும் தெற்கு பீஹாரை இணைக்கும் விதமாக, கங்கை நதியின் மீது 6 வழிப்பாலத்தையும் அவர் திறந்து வைத்தார்.

அதோடு, கயா - டில்லி இடையிலான அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் வைஷாலி - கோடர்மா இடையிலான ரயில் சேவையையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, பிரதமர் மோடி பேசியதாவது; இன்று புனித மண்ணான கயாஜியில் ரூ.12,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. எரிசக்தி, சுகாதாரம் மற்று நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களை உள்ளடக்கியது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் பீஹாரில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வலுக்கொடுக்கும். பீஹார் மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.

ஒரு காங்கிரஸ் முதல்வர், பீஹாரைச் சேர்ந்த மக்களை தனது மாநிலத்திற்குள் நுழைய விடமாட்டேன் என்று கூறியிருந்தார். பீஹார் மக்களுக்கு எதிரான காங்கிரஸின் வெறுப்பை யாரும் மறக்க முடியாது. பீஹார் மக்கள் மீது காங்கிரஸின் மோசமான நடத்தையை பார்த்தும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. பீஹாரின் இளைஞர்கள் தங்கள் மாநிலத்திலேயே வேலைவாய்ப்பைப் பெறுவதற்கும், நன்மதிப்புடன் தங்கள் பெற்றோருடன் தங்கியிருக்கும் வகையிலும் என்டிஏ கூட்டணி கடுமையாக உழைக்கிறது, இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, நிகழ்ச்சியில் முதல்வர் நிதிஷ்குமார் பேசுகையில், "இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். ஆனால், இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் எதுவும் செய்யவில்லை. மீண்டும் என்டிஏ கூட்டணி ஆட்சிக்கு வந்த போது, இந்தப் பகுதிக்கு கயாஜி என்று பெயர் மாற்றம் செய்ததே நாங்கள் தான். ஒவ்வொரு துறையிலம் வளர்ச்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது," என்றார்.




@block_B@

கிளர்க்கிற்கு ஒரு சட்டம்... பிரதமருக்கு ஒரு சட்டமா?



சிறை சென்றால் பதவி பறிப்பு மசோதா குறித்து பேசிய பிரதமர் மோடி ; ஒரு அரசு அலுவலகத்தின் கிளர்க் 50 மணிநேரம் சிறையில் இருந்தால் தானாகவே பதவியை இழப்பார். அப்படியிருக்கும் போது, பிரதமர், முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு ஏன் இது பொருந்தாது?. சில ஆண்டுகளுக்கு முன்பு, முதல்வர்களோ, அமைச்சர்களோ சிறை சென்றால், அங்கிருந்தவாறு, அரசு கோப்புகள் மற்றும் ஆவணங்களுக்கு கையெழுத்து போடுவார்கள். இதுபோன்ற தலைவர்கள் இருக்கும் போது, ஊழலுக்கு எதிராக எப்படி போராட முடியும். எனவே, ஊழலுக்கு எதிராக என்டிஏ அரசு சட்டத்தை கொண்டு வந்தது. அதன் கீழ் பிரதமரே குற்றம் செய்தாலும் தண்டிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது, என்றார்.block_B

Advertisement