இந்தியாவுக்கான புதிய தூதர் செர்ஜியோ கோர்: அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

2

வாஷிங்டன்: இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.



டிரம்பின் புதிய வரி விதிப்பு காரணமாக, இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் எழுந்துள்ளது.


இந் நிலையில், இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் நியமிக்கப்பட்டு உள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி உள்ளதாவது;


செர்ஜியோ கோரை இந்தியாவுக்கான அமெரிக்க தூதராகவும், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்பு தூதராகவும் பதவி உயர்வு அளிக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். செர்ஜியோ பதவியேற்கும் வரை அவர் வெள்ளை மாளிகையில் தனது தற்போதைய பணியில் நீடிப்பார்.


அவர் எனது சிறந்த நண்பர். பல ஆண்டுகளாக என்னுடன் இருக்கிறார். எனது தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் பணியாற்றியவர். அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்க எங்களுக்கு உதவ முழுமையாக நம்பும் ஒருவர் இருப்பது முக்கியம். செர்ஜியோ அப்படி ஒரு தூதராக மாறுவார். வாழ்த்துகள்.


இவ்வாறு டிரம்ப் கூறி உள்ளார்.


58 வயது நிரம்பிய செர்ஜியோ கோர், தற்போது ஜனாதிபதி மாளிகையில் பணியாளர் அலுவலக இயக்குநராக இருக்கிறார்.

Advertisement