விஜய் போக வேண்டிய துாரம்... புரிந்து கொண்டால் சரி!

சமீபத்தில் விஜய் கட்சியான த.வெ.க., நடத்திய இரண்டாவது மாநில மாநாடும், அதில் கூடிய ரசிகர்களின் அபரிமிதமான கூட்டமும் பல்வேறு தரப்பினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பது உண்மை. ஒரு புள்ளிவிபரத்தின் படி, கிட்டத்தட்ட 1.5 லட்சம் பேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருப்பர் என்று தெரிகிறது. இது ரசிகர்களாக வந்து சேர்ந்தனர், அவர்களை யாரும் அழைத்து வரவில்லை என்பதும் முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது.
இவையெல்லாம் சேர்ந்து, 2026 தேர்தலில் அவருக்கு எவ்வளவு சதவீத வாக்குகளைப் பெற்றுத் தரும் என்றொரு கணக்கும் போடப்படுகிறது. த.வெ.க., 8 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை வாக்குகளைப் பெறக்கூடும் என்பது பெரும்பாலான பத்திரிகையாளர்களின் கணிப்பு. ஆனால், அவர் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு முன்னேறிவிடுவார் என்பது அவரது ரசிகர்களின் எண்ண ஓட்டம்.
வழக்கம்போல், தென் இந்திய அரசியலில் சினிமா நடிகர்கள் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்; முதல் தேர்தலில் அவர்கள் என்ன வாக்கு சதவீதத்தை பெற்றுள்ளனர் என்று பழைய விபரங்களைத் தேடிப் பார்த்தால், பல சுவாரசியங்கள் காத்திருக்கின்றன.
மேலே இருந்து துவங்குவோம். 1983ல், தெலுங்கு தேசம் கட்சியைத் துவங்கி, ஆறே மாதங்களில் ஆந்திர மாநிலப் பொதுத் தேர்தலில் நின்று, என்.டி. ராமாராவ் வாங்கிய வாக்கு, 46.3 சதவீதம். 294 சட்டசபை இடங்களில், 201 இடங்களை அவரது கட்சி பெற்றது.
இவருக்கு அடுத்து அதிக வாக்கு விகிதம் பெற்றவர் எம்.ஜி.ராமச்சந்திரன். 1977 தமிழக பொதுத் தேர்தலில், அவர் வாங்கியது 30.36 சதவீத வாக்குகள். 234 தொகுதிகளில் 130 தொகுதிகளில் அவரது அ.தி.மு.க., வெற்றி பெற்றது.
அவருக்கு அடுத்து சிரஞ்சீவி வருகிறார். அவரது பிரஜா ராஜ்ஜியம் கட்சி, 2009 ஆந்திரப் பிரதேசப் பொதுத் தேர்தலில், 16.32 சதவீத வாக்குகளைப் பெற்றது. 18 சட்டசபை இடங்களிலும் வெற்றி பெற்றது.
ஓட்டுகளாக திரளவில்லை வாக்கு சதவீத கணக்கில் சிரஞ்சீவிக்கு அடுத்து வருவது விஜயகாந்த். அவரது தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், 2006 தமிழக பொதுத் தேர்தலில் 8.38 சதவீத வாக்குகளைப் பெற்றது. அவர் மட்டும் விருத்தாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்றார்.
பவன் கல்யாண் இந்த வரிசையில் வரும் அடுத்தவர். அவரது ஜனசேனா கட்சி, 2019 ஆந்திரப் பிரதேசப் பொதுத் தேர்தலில், 6 சதவீத வாக்குகளைப் பெற்றது. அவர் போட்டியிட்ட இரண்டு சட்டசபைத் தொகுதிகளிலும் அவர் தோற்றுப் போனார்.
மிகவும் கீழே இருக்கும் இருவர், கமல்ஹாசன் மற்றும் சரத்குமார். கமலின் மக்கள் நீதி மய்யம், 2019 பார்லிமென்ட் தேர்தலில் நின்றது. 3.72 சதவீத வாக்குகளைப் பெற்றது. எந்தத் தொகுதியிலும் வெல்லவில்லை.
கடந்த, 2011 பொதுத் தேர்தலில் சரத்குமாருடைய அனைத்திந்திய சமத்துவ மக்கள் கட்சி, அ.தி.மு.க.வோடு கூட்டணி கண்டு, தேர்தலில் நின்றது. அதுவும் இரட்டை இலை சின்னத்தில் நின்றதால், அவரது கட்சிக்கான வாக்கு சதவீதம் எவ்வளவு என்பது தெரியவில்லை.
எதற்கு இந்த எண்ணிக்கையைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். கண்ணுக்குத் தெரிந்து, விஜய் கட்சிக்குக் கூடிய கூட்டத்தை விட பல மடங்கு அதிகம் கூடியது பவன் கல்யாணுக்குத் தான். அவர் மீது அவரது ரசிகர்களுக்கு அப்படியொரு பிரம்மை. ஆனால், அவையெல்லாம் வாக்குகளாக திரளவில்லை.
என்.டி.ராமாராவுக்கு அவ்வளவு அதிகமான வாக்குகள் திரண்டதற்கு அவர் மட்டுமே காரணமில்லை. அதற்கு முன்பு பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆந்திர மாநிலத்தில் ஆட்சி செய்து வந்தது.
அக்கட்சியின் மீதான அதிருப்தி அவ்வளவு துாரம் பெருகியிருந்தது. அந்த நேரத்தில் தான் என்.டி.ஆர்., அரசியலுக்கு வருகிறார். அதனால், மிகப் பெரிய அளவில் மக்கள் ஆதரவு அங்கே திரண்டது.
அதே ஆந்திரத்தில், சிரஞ்சீவி இன்னொரு பிரமாண்ட ஸ்டார். நிச்சயம் அடுத்த முதலமைச்சர் என்று கருதப்பட்டவர். ஆனால், அவரது ரசிகர்கள் வாயிலாக திரண்ட வாக்குகள், 16.32 சதவீதம் தான்.
அதாவது, அவர் ஆட்சி செய்ய வரவேண்டும் என்று அழைக்கும் அத்தியாவசிய அரசியல் காரணம் ஏதும் அந்தச் சமயத்தில் சிரஞ்சீவிக்காக காத்திருக்கவில்லை; அதேபோல் தான் பவன் கல்யாணுக்கும்.
எம்.ஜி.ஆருக்கும், விஜயகாந்துக்கும் கூட, முற்றிலும் வேறான களம். அரசியல் ரீதியாக அவர்கள் களமிறங்க வேண்டிய சமூக அரசியல் நெருக்கடி அவரவர் காலகட்டங்களில் ஏற்பட்டன.
அவற்றை நிறைவேற்றுவதற்காக அவர்கள் தேர்தல் அரசியலுக்கு வந்தபோது, பெரும் வரவேற்பையும், வாக்கு சதவீதத்தையும் பெற்றனர்.
எம்.ஜி.ஆர்., அளவுக்கு, விஜயகாந்த் வந்த நேரத்தில் அரசியல் அவசியம் இல்லை என்பது தான் உண்மை. அதனால் தான் அவரால் இரண்டிலக்க வாக்கு சதவீதத்தை முதல் தேர்தலில் பெற முடியவில்லை. ஆனால், அவர் வாங்கிய 8.38 சதவீதமே முக்கியமானதாக கருதப்பட்டது.
அழுத்தமான அரசியல் சரத்குமாருக்கோ, கமல்ஹாசனுக்கோ, எத்தகைய அரசியல் அவசியமும் அவர்களை தேர்தல் அரசியலுக்கு அழைத்து வரவில்லை.
ஒரு புதிய கட்சியின் தலைவர், மக்கள் மத்தியில் எடுபடுவதற்கு, அழுத்தமான அரசியல் காரணமும் தேவையும் அவசியமும் இருந்தால் தான் அவர்களால் மிளர முடியும்.
முதல் தேர்தலுக்குப் பின் என்ன ஆயிற்று என்பது அடுத்த அத்தியாயம். உதாரணமாக, 18 இடங்களைப் பிடித்த சிரஞ்சீவியால் தன் கட்சியைக் கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்ள முடியவில்லை.
அவரது கட்சியில் இருந்து வெற்றி பெற்று வந்த எம்.எல்.ஏ.,க்கள் மாற்று வழி தேடத் துவங்கிவிட்டனர். ஒரு கட்டத்தில், சிரஞ்சீவி தமது கட்சியைக் காங்கிரஸோடு இணைத்துவிட்டு, தானும் மத்திய அமைச்சர் ஆனார்.
விஜயகாந்த் விஷயத்திலும் அப்படித்தான் நடைபெற்றது. தே.மு.தி.க., சார்பாக வெற்றி பெற்றவர்களில் ஐந்து எம்.எல்.ஏ.,க்கள், தங்களுடைய, 'தொகுதி நலனு'க்காக அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவைப் போய்ச் சந்தித்தனர்.
அவர்கள் அனைவரும் பதவி இழக்கவில்லை. மாறாக, அந்த ஆட்சிக் காலம் முழுதும் சட்டசபையில் தனித்தே இயங்க அனுமதிக்கப்பட்டனர்.
பவன் கல்யாண் விஷயம் தான் வித்தியாசமானது. முதல் தேர்தலில் தோல்வியுற்றாலும், அவரும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்களும் தொடர்ந்து ஆந்திர அரசியலில் ஏதேனும் ஒரு விஷயத்தை எடுத்துப் பேசி வந்தனர். பல மக்கள் பிரச்னைகளில் தலையிட்டனர். அவரால் தனது கட்சியை நடத்திக் கொண்டு போக முடிந்தது.
அதன் முடிவில் தான், அவர் சந்திரபாபு நாயுடுவோடு கூட்டணி கண்டு, கடந்த ஆந்திரப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார்.
மக்கள் நீதி மய்யம், தமிழகத்தின் அக்மார்க் உதாரணம். 2019 தேர்தலில் அக்கட்சியால் சோபிக்க முடியவில்லை என்றவுடன், அவரது கட்சியினருடைய கவனம் சிதறிப் போக ஆரம்பித்தது.
மய்யம் கட்சியில் இருந்து பல முக்கியஸ்தர்கள் தி.மு.க.,வில் போய் தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டனர். கடைசியில் 2021 பொதுத் தேர்தலில், கமலும் தி.மு.க.,வோடு சமரசம் கண்டார்.
அறிவுசார் முகம் தேவை அதாவது, கட்சி வெற்றி வாய்ப்பை இழந்தாலும், அதை உயிர்ப்போடும், மதிப்போடும் வைத்திருப்பவர்களுக்கே மறுவாய்ப்பு கிடைக்கும். அதுவரை கட்சியைக் காப்பாற்ற வேண்டும்.
எம்.ஜி.ஆர்., ஆட்சிக் காலத்தில், கருணாநிதி, தி.மு.க.,வை, 13 ஆண்டுகள் கட்டிக் காத்தது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை இந்தப் பின்னணியில் புரிந்து கொள்ளலாம்.
அப்படியானால், விஜய் மாநாடுக்கு திரண்ட கூட்டத்தை எப்படி வரலாற்று புரிதலோடு அணுக வேண்டும்?
முதலில், அவரது அரசியல் பிரவேசத்துக்கான சமூக, பொருளாதார காரணி, அவசியம், அழுத்தம் ஏதும் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி ஓர் இடம் இல்லாத பட்சத்தில், அவரது வருகையை அவரது ரசிகர்கள் வரவேற்கலாம், கொண்டாடலாமே தவிர, பொதுமக்களுக்கு அவர் மீது ஈர்ப்பு ஏற்பட வாய்ப்பில்லை.
இளைய ரசிகர்களே போதும், அவர்களே அவரை ஆட்சிக்கட்டிலுக்கு அழைத்துப் போய்விடுவர் என்பது எப்போதும் நடைபெற்றதில்லை. அது என்.டி.ஆர்., ஆக இருக்கட்டும், எம்.ஜி.ஆர்., ஆக இருக்கட்டும், அரசியல் தேவையோடு ரசிகர் பலமும் சேரும்போது தான் மிகப் பெரிய வெற்றியை அவர்களால் பதிவு செய்ய முடிந்தது.
ஆனால், இளைய ரசிகர்கள் என்போர் வேறொரு வகையில் முக்கியமானவர்கள். அவர்கள் ஏற்கெனவே இருக்கும் ஐந்தைப் பத்தாக்குவர். இதற்கு நேரடி உதாரணம், பவன் கல்யாண்.
அவரது பின்னால் திரண்டவர்களும் இளைஞர்கள். அந்தப் பலம் தனித்து நின்றபோது, பெரிய அளவில் மிளிர வில்லை. அதுவே, அவரது ஜனசேனா, நாயுடுவின் தெலுங்கு தேசத்தோடு கூட்டணி கண்டபோது, ஐந்து பத்தானது. வெற்றி வாய்ப்பு உறுதியானது.
இவை எல்லாவற்றுக்கும் மேல் ஒரு விஷயம் இருக்கிறது. ஒரு கட்சிக்கு பாப்புலர் முகம் என்பதோடு கொஞ்சம் அறிவுசார் முகமும் தேவை. கடைசியாக ஆட்சிப் பீடத்துக்கு ஏறிய பவன் கல்யாண், முதல் தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர், படிப்படியாக தன் கட்சியின் இண்டெலெக்சுவல் முகத்தை பலப்படுத்திக் கொண்டார்.
சமூக, பொருளாதார விஷயங்களில் தெளிவாக அவருடைய கட்சியினர் பேசத் துவங்கினர். அது அந்தக் கட்சிக்கும், அதன் நிர்வாகத் திறனுக்கும் ஒரு மவுசையும் நம்பிக்கையையும் உருவாக்கியது.
இதையெல்லாம் நடிகர் விஜய் படிப்பார் எனில், அவர் போக வேண்டிய துாரம் எவ்வளவு என்பது அவருக்கே தெரிய வரும்.
ஆர்.வெங்கடேஷ், பத்திரிகையாளர்









மேலும்
-
வாலாஜாபாத் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
-
சாம்பிராணி ஏற்றுவது எதற்காக?
-
இந்தியாவிலேயே பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு; கடைசி இடத்தில் மம்தா பானர்ஜி!
-
டிரம்பின் கருத்தை இந்தியா தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்; நிக்கி ஹாலே
-
பிரதமருக்கு விதிவிலக்கல்ல: பதவி பறிப்பு மசோதாவில் மோடியின் நிலைப்பாட்டை விவரித்தார் கிரண் ரிஜிஜூ!
-
அரசின் அமுதசுரபி ஆகிறது அந்தமான்; துவங்கியது மத்திய அரசின் எரிவாயு தேடல்