டிரம்பின் கருத்தை இந்தியா தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்; நிக்கி ஹாலே

28


வாஷிங்டன்: ரஷ்ய எண்ணெய் தொடர்பான டிரம்பின் கருத்தை இந்தியா தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என இந்திய வம்சாவளியை சேர்ந்த ஐநாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்தார்.

இது குறித்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தெற்கு கரோலினா மாகாணத்தின் முன்னாள் கவர்னரும், ஐநாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதருமான நிக்கி ஹாலே கூறியதாவது: ரஷ்ய எண்ணெய் தொடர்பான டிரம்பின் கருத்தை இந்தியா தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் ஒரு தீர்வைக் காண வெள்ளை மாளிகையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். இது விரைவில் நடந்தால் நல்லது.



உலகின் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளுக்கு இடையேயான பல தசாப்த கால நட்பை உறுதி செய்ய வேண்டும். வர்த்தக கருத்து வேறுபாடுகள் மற்றும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதிகள் போன்ற பிரச்னைகளை கையாள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆனால், மிக முக்கியமானவற்றை நாம் மறந்துவிடக் கூடாது.


நமது தேவையாக இருப்பது, சீனாவை எதிர்கொள்ள, அமெரிக்காவிற்கு இந்தியாவில் ஒரு நண்பர் இருக்க வேண்டும். இவ்வாறு நிக்கி ஹாலே கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன்பும் அமெரிக்காவிற்கு, இந்தியாவின் உறவு அவசியம் என நிக்கி ஹாலே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement