4,118 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை

சிதம்பரம் : சிதம்பரத்தில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் பணி நியமன ஆணை வழங்கினார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் கல்லுாரி வளாகத்தில் மகளிர் திட்டம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலை வகித்தார். முகாமில், தேர்வானவர்களுக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் பணி நியமன ஆணை வழங்கினார்.பின், அவர் பேசியதாவது:

கடலுார் மாவட்டம் அதிக கிராம பகுதிகளை கொண்டது. கிராம பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் குறிப்பாக பெண்கள் அதிகளவில் வேலைவாய்ப்பு பெறுவதன் மூலமாக அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுவதுடன், வாழ்வில் முன்னேற்றம் அடைவார்கள்.

கடலுார் மாவட்டத்தில் மகளிர் திட்டம் சார்பில் பல்வேறு விதமான வாழ்வாதார செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஓர் அங்கமாக கடலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்கள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன.

கடலுார் மாவட்டத்தில் இதுவரை நடந்த 16 சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்களில் 32,618 இளைஞர்கள் பங்கேற்றனர். இதில் 4,118 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

மகளிர் திட்டம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் பல்வேறு திட்டங்களின் வாயிலாக 1,560 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட திட்ட அலுவலர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) ஜெயசங்கர், உதவி திட்ட அலுவலர் சரவணபாண்டியன்,பேரூராட்சி தலைவர் பழனி, ஒன்றிய செயலாளர் சங்கர், ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement