தொகுதிக்கு நன்மை செய்வதில் ராகுலை முந்திய பிரியங்கா!

6


புதுடில்லி: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், உ.பி., மாநிலத்தின் அமேதி தொகுதி எம்.பி., எந்த நேரமும் பார்லிமென்டிலும், வெளியிலும் ஆக்ரோஷமான அரசியல் செய்து கொண்டிருக்கிறார். இவரது தொகுதி குறித்து, சபையில் அதிகம் பேசியதே இல்லை; தொகுதியை இவர் கண்டுகொள்கிறாரா என்பதே சந்தேகம்.


ஆனால், இவரது சகோதரியான பிரியங்கா, தன் தொகுதியை அருமையாக கவனித்துக் கொள்கிறார். இவர், கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி., மலைச் சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டிற்கு, காங்கிரஸ் ஆட்சி செய்யும் ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா அரசுகளிடமிருந்து கோடிக்கணக்கில் நன்கொடை பெற்றார்.

அத்துடன், கேரளாவிற்கு எந்த பிரச்னை என்றாலும், உடனே கேரளா எம்.பி.,க்களை தன்னுடன் அழைத்துச் சென்று, சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்து உதவி கேட்கிறார் பிரியங்கா. சமீபத்தில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டாவை, கேரளா எம்.பி.,க்கள் குழுவுடன் சந்தித்தார் பிரியங்கா.



தன் தொகுதியான வயநாட்டிற்கு தேவையான மருத்துவ உதவிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும், 'கேரளாவில் எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு அமைக்க வேண்டும்' என்கிற நீண்ட நாள் கோரிக்கையையும் வலியுறுத்தியுள்ளார். தவிர, வயநாட்டின், 'ரொபஸ்டா' வகை காபிக்கு, மத்திய அரசு உதவி செய்யவும் வகை செய்துள்ளார் பிரியங்கா.


இப்படி, தன் தொகுதிக்கும், கேரளாவிற்கும் தொடர்ந்து பல நலத் திட்டங்களை கொண்டு வர, மத்திய அரசின் உதவியை கோரி வருகிறார். அடுத்த ஆண்டு, கேரளாவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரியங்காவின் சேவை, இங்குள்ள காங்., தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன், மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது.


'சகோதரி இப்படி நல்ல விஷயங்களில் நேரத்தை செலவிடுகிறார்; ஆனால், ராகுலோ போராட்டம், தர்ணா என ஆக்கப்பூர்வமாக செயல்படாமல், அதிரடியாக செயல்படுகிறார்' என, காங்கிரசார் வருத்தப்படுகின்றனர்.

Advertisement