யு.எஸ்., ஓபன்: சபலென்கா அபாரம்

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் ஜோகோவிச், சபலென்கா வெற்றி பெற்றனர்.
அமெரிக்காவின் நியூயார்க்கில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில், உலகின் 'நம்பர்-7' வீரர், செர்பியாவின் ஜோகோவிச், 50 வது இடத்திலுள்ள லியர்னெர் தியனை சந்தித்தார். 2 மணி நேரம், 24 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் ஜோகோவிச், 6-1, 7-6, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.
மற்ற முதல் சுற்று போட்டிகளில் அமெரிக்காவின் பிரிட்ஸ், ஆஸ்திரேலியாவின் தாம்ப்சன், பிரான்சின் போன்ஜி வெற்றி பெற்றனர்.
சபலென்கா அபாரம்
பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் உலகின் 'நம்பர்-1', போலந்தின் சபலென்கா, 108வது இடத்திலுள்ள சுவிட்சர்லாந்தின் ரெபெக்காவை சந்தித்தார். முதல் செட்டில் மட்டும் போராடிய (7-5) சபலென்கா, அடுத்த செட்டை எளிதாக (6-1) வென்றார். முடிவில் சபலென்கா 7-5, 6-1 என நேர் செட்டில் வெற்றி பெற்றார்.
மற்ற போட்டிகளில் ஆஸ்டபென்கோ (லாட்வியா), ஜெசிகா பெகுலா, எம்மா நவாரோ (அமெரிக்கா), பெலிண்ட பென்சிக் (சுவிட்சர்லாந்து), பாவோலினி (இத்தாலி) உள்ளிட்டோர் வென்று, இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தனர்.

19-0
கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 24 பட்டம் வென்றவர் ஜோகோவிச். யு.எஸ்., ஓபன் டென்னிசில் கடந்த 2005 முதல் பங்கேற்கிறார். முதல் சுற்றில் களமிறங்கிய 19 போட்டிகளிலும் வெற்றி பெற்றார் (19-0). இதில் 4 முறை (2011, 2015, 2018, 2023) கோப்பை வென்றுள்ளார். தற்போது 38 வயதான ஜோகோவிச், இம்முறை மிகவும் தடுமாறினார். வயதானதால், முழங்கால் வலியால் அவதிப்படுவது போல, திணறினார். அவர் கூறுகையில்,'' காயம் எதுவும் இல்லை என்றாலும், நீண்ட நேரம் விளையாடிய போது சிரமமாக இருந்தது,'' என்றார்.

Advertisement