பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில் இருந்தும் ஓய்வு: அஸ்வின் அறிவிப்பு

3

சென்னை: பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்துள்ளார்.



இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கை;


சிறப்பான நாள் என்பதால் ஒரு சிறப்பான ஆரம்பம். ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தை தரும். பிரிமீயர் லீக் கிரிக்கெட் வீரரான எனது நேரம் இன்றுடன் முடிகிறது. ஆனால் மற்ற லீக் போட்டிகளில் விளையாடுவதற்கான எனது நேரம் ஆரம்பமாகிறது.


பல ஆண்டுகால நினைவுகள், உறவுகள் மிகவும் முக்கியமானவை. எனக்கு இதுவரை வாய்ப்பு அளித்த பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடர் உரிமையாளர்கள், பிசிசிஐ நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கு முன்னால் தற்போதுள்ள வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்த காத்திருக்கிறேன்.


இவ்வாறு அந்த பதிவில் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.


கிரிக்கெட் வீரர் அஸ்வின்(38) சென்னையைச் சேர்ந்தவர். 2010ம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் ஆட்டம் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி எடுத்து வைத்தார்.


2011ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை தொடர், 2013ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணியில் இடம்பிடித்தவர். பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில் 221 ஆட்டங்களில் விளையாடி 187 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். பேட்டிங்கில் 98 இன்னிங்சில் 833 ரன்கள் எடுத்துள்ளார்.


ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளை விட டெஸ்ட் போட்டிகளில் அதிக ஆதிக்கம் செலுத்தியவர். நட்சத்திர வீரர் என்ற அடையாளத்துடன் அணியில் இடம்பெற்றிருந்த அஸ்வின், ஆஸி.யில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது யாரும் எதிர்பாராத வண்ணம் ஓய்வை அறிவித்து நாடு திரும்பினார்.


பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்காக சிறப்பாக விளையாடிய போதும் பின்னர் ஒருகட்டத்தில் பெரிதாக சோபிக்க முடியாமல் போனது. பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே வீரர்கள் ஏலத்தில் முறைகேடு என்று குற்றம்சாட்டி பின்னர் அவ்வாறு கூறவில்லை என்றும் விளக்கம் அளித்து இருந்தார்.

Advertisement