ஜார்க்கண்டில் நக்சலைட்கள் உடன் துப்பாக்கிச்சண்டை: பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் வீரமரணம்

1


ராஞ்சி: ஜார்க்கண்டில் நக்சலைட்களுடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.


ஜார்க்கண்டின் பலாமு மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது. அப்பகுதியில் போலீசாருடன் பாதுகாப்பு படையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பாதுகாப்புப் படையினர் வீரமரணம் அடைந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது: நக்சலைட்டுகள் உடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், பாதுகாப்புப் படையினர் 3 பேருக்கு குண்டு காயம் ஏற்பட்டது.



அவர்கள் உடனடியாக மெதினிராய் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு டாக்டர்கள் அவர்களில் இருவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் காயமடைந்த ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement