தகுதியற்றவர்களுக்கு இலவச ஆடுகள்: வழக்கு தள்ளுபடி * உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மதுரை : மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே வீரபெருமாள்புரம் நாராயணன்.

இவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: வீரபெருமாள்புரம் ஊராட்சியில் தகுதியற்ற சிலருக்கு இலவச ஆடுகள் வழங்கப்பட்டன. ஆடுகள் கொள்முதல் மற்றும் பயனாளிகளுக்கு வழங்குவதில் விதிகளை பின்பற்றவில்லை. கால்நடைத்துறை இயக்குனர், கலெக்டருக்கு 2016 மற்றும் 2024 ல் புகார் அனுப்பினேன். விசாரித்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், ஊராட்சித் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு பிறப்பித்த உத்தரவு: இலவச ஆடுகள் 2015 ல் வழங்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் கடந்து விட்டன. குற்றச்சாட்டை நிரூபிக்க மனுதாரர் தரப்பில் எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்க முடியவில்லை. ஆவணம் அல்லது ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில் மனுவை பரிசீலிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப் படுகிறது என்றது.

Advertisement