கொலை முயற்சி வழக்கு நிரூபணம் மகளை கொன்று தாய் தற்கொலை

உடுப்பி : கொலை முயற்சி வழக்கில் கணவர், அவரது குடும்பத்தினர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், வேதனை அடைந்த மனைவி, ஒன்றரை வயது மகளை கொன்று, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக, உடுப்பி எஸ்.பி., ஹரிராம் சங்கர் கூறியதாவது:

உடுப்பி மாவட்டம், பிரம்மாவரின் குன்ஜாலு ஹாரஞ்சே பகுதியில் பெண் ஒருவர், குழந்தையுடன் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடப்பதாக பிரம்மாவர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற போலீசார், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பெண் எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில், 'என் சாவிற்கு நானே காரணம்' என்று எழுதியிருந்தார்.

முதல்கட்ட விசாரணையில், இறந்தவர் சுஷ்மிதா, 35, அவரது ஒன்றரை வயது மகள் ஸ்ரேஸ்தா என்பது தெரிய வந்துள்ளது. முதலில் மகளை கொன்று, சுஷ்மிதா தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

இவரின் கணவர், அவரது குடும்பத்தினர் மீடு 2009ல் கொலை முயற்சி வழக்குப் பதிவானது. இவ்வழக்கில், இவர்கள் குற்றவாளிகள் என்று சமீபத்தில் கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பு வழங்கியது.

இதனால் வேதனை அடைந்த அவர், இம்முடிவு எடுத்திருக்கலாம். ஆனாலும், போலீசார் அனைத்து கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement