தங்கம் கடத்திய நடிகை ரன்யா ராவ் உட்பட 4 பேருக்கு... ரூ.270 கோடி அபராதம்! வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடி

கர்நாடகாவின் மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரியும், சிவில் அமலாக்க இயக்குனரக டி.ஜி.பி.,யுமான ராமசந்திர ராவின் வளர்ப்பு மகள் ரன்யா ராவ், 34; கன்னட நடிகை. கடந்த மார்ச் 3ம் தேதி இரவு துபாயில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் வந்தார். அவர் தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின்படி, டி.ஆர்.ஐ., எனும் வருவாய் புலனாய்வு பிரிவின் பெங்களூரு அதிகாரிகள், ரன்யா ராவை சோதனைக்கு உட்படுத்தினர்.

அவரிடம் இருந்து, 12 கோடி ரூபாய் மதிப்பிலான 14.80 கிலோ தங்க கட்டிகள் சிக்கின. அவர் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

டி.ஆர்.ஐ., அதிகாரிகள் நடத்திய விசாரணையில், துபாயில் இருந்து தங்கம் கடத்தியதில், ரன்யா ராவின் முன்னாள் காதலனும், தெலுங்கு நடிகருமான தருண் கொண்டாரு ராஜு, பல்லாரி தொழில் அதிபர்கள் ஷாகில் ஜெயின், பரத் ஜெயின் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது. அவர்களும் கைது செய்யப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

'காபிபோசா' ஜாமின் கேட்டு நான்கு பேரும் பல முறை, பொருளாதார குற்றப்பிரிவு, உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். ஆனால் ஜாமின் கிடைக்கவில்லை.

நான்கு பேரும் சிறையில் இருந்து ஓராண்டு வெளியே வராமல் இருக்கும் வகையில், நான்கு பேருக்கு எதிராக காபிபோசா சட்டத்தையும், வருவாய் புலனாய்வு பிரிவு அமல்படுத்தியது.

இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்தது பற்றி, அமலாக்கத்துறை விசாரிக்கிறது. ரன்யாவுக்கு சொந்தமான 34.12 கோடி ரூபாய் சொத்துகளும் முடக்கப்பட்டன.

இந்நிலையில், ரன்யா உள்ளிட்ட நான்கு பேருக்கும், டி.ஆர்.ஐ., அதிகாரிகள் மேலும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் அளித்து உள்ளனர்.

சொத்து பறிமுதல் அதாவது துபாயில் இருந்து சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வந்து, வரி செலுத்தாமல் மோசடி செய்தததற்காக, அபராத தொகை செலுத்த வேண்டும் என்று, ரன்யா ராவ் உட்பட நான்கு பேரிடமும், சிறைக்கு சென்று, டி.ஆர்.ஐ., அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்து உள்ளனர்.

ரன்யா, 127.3 கிலோ தங்கம் கடத்தியதால் அவருக்கு 102.55 கோடி ரூபாயும்; 72.6 கிலோ தங்கம் கடத்திய தருண் கொண்டாரு ராஜுவுக்கு 62கோடி ரூபாயும்; தலா 63.61 கிலோ தங்கம் கடத்திய ஷாகில் ஜெயின், பரத் ஜெயினுக்கு தலா 53 கோடி ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது. நான்கு பேருக்கும் விதிக்கப்பட்ட மொத்த அபராத தொகை 270.55 கோடி ரூபாய் ஆகும்.

'அபராத தொகையை செலுத்தாவிட்டால், உங்களது சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்' என்றும், டி.ஆர்.ஐ., கொடுத்துள்ள நோட்டீசில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அமலாக்கத்துறை வக்கீல் மது என் ராவ் கூறுகையில், ''வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவோர் பிடிபடும் போது, அவர்கள் கடத்தி வந்த தங்கம், வரி செலுத்தாமல் ஏமாற்றியதற்காக, ஆறு மாதங்களுக்குள் அவர்களிடம் இருந்து அபராத தொகையை, டி.ஆர்.ஐ., வசூலிக்க வேண்டும் என்ற விதி உள்ளது.

''இதன் அடிப்படையில் ரன்யா உட்பட நான்கு பேருக்கும், அபராதம் செலுத்தும்படி நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. அபராதம் செலுத்தா விட்டால், அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யவும், டி.ஆர்.ஐ.,க்கு உரிமை உள்ளது,'' என்றார்.

Advertisement