சத்தீஸ்கரில் அடர் வனப்பகுதியில் தேடுதல் வேட்டை: 5 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

1

ராய்பூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.



சத்தீஸ்கரின் தண்டேவாடா நாராயண்பூர் எல்லையில் அபுஜ்மத் காடுகள் உள்ளது. இது மிகவும் அடர்ந்த வனப்பகுதியாகும்.இங்குள்ள காடுகளில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.


இதையடுத்து, மாவட்ட ரிசர்வ் படையினர், சிறப்பு படையினர் உள்ளிட்ட குழுக்கள் அந்த குறிப்பிட்ட பகுதியில் தேடுதல் வேட்டையில் இறங்கியது. அப்போது அங்கு மறைந்திருந்த நக்சலைட்டுகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர்.


அதற்கு பதிலடியாக, பாதுகாப்புப் படையினரும் திருப்பிச் சுட்டனர். இருதரப்பினர் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 5 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.


இந்த தகவலை எஸ்.பி. கவுரவ் ராய் உறுதிப்படுத்தி உள்ளார். கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் அடையாளங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தேடுதல் வேட்டை தொடர்கிறது என்றார்.

Advertisement