எங்களுக்கும் நிதியுதவி வேண்டும் எம்.எல்.சி.,க்கள் வலியுறுத்தல்

பெங்களூரு : 'எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்குவதை போன்று, தங்களுக்கும் நிதியுதவி, சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்' என, ஆளுங்கட்சி எம்.எல்.சி.,க்கள் வலியுறுத்தினர்.

பெங்களூரின் விதான் சவுதாவில், ஆளுங்கட்சி எம்.எல்.சி.,க்களுடன், நேற்று முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தினார். மேல்சபை காங்., தலைவரும், அமைச்சருமான போசராஜு, எம்.எல்.சி.,க்கள் ஹரிபிரசாத், சீதாராம், சலீம் அகமது, புட்டண்ணய்யா, ரவி, ஐவான் டிசோசா, நஜீர் அகமது, சென்னராஜி ஹட்டிஹோளி, நாகராஜ் யாதவ், தினேஷ் கூளிகவுடா உட்பட பலர் பங்கேற்றனர்.

எம்.எல்.சி.,க்கள் முதல்வரிடம் பல கோரிக்கைகளை முன் வைத்தனர்.

'எம்.எல்.ஏ.,க்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், எங்களுக்கும் கிடைக்க வேண்டும்.

இடமாற்றம், நிதியுதவி விஷயமாக, எம்.எல்.சி.,க்கள் அளிக்கும் கடிதங்களை அதிகாரிகள் அலட்சியம் செய்கின்றனர். அமைச்சர்களும் கூட, எம்.எல்.ஏ.,க்களுக்கு தரும் முக்கியத்துவத்தை, எங்களுக்கு தருவதில்லை. எம்.எல்.ஏ., க்களுக்கு தலா 50 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. அதே போன்று, எம்.எல்.சி.,க்களுக்கும் நிதி வழங்க வேண்டும்' என, முதல்வரிடம் வலியுறுத்தினர்.

மேல்சபை தலைவர் பதவியில், காங்கிரசாரை அமர்த்துவது குறித்தும், முதல்வருக்கு எம்.எல்.சி.,க்கள் ஆலோசனை கூறியதாக, தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement