விபத்து இழப்பீடு வழங்காததால் ஸ்ரீவி.,யில் அரசு விரைவு பஸ் ஜப்தி

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம்- ஸ்ரீவில்லிபுத்துாரில் விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவிக்கு இழப்பீடு தொகை வழங்காததால் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

ராஜபாளையம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த நாகராஜன் மகள் சிவரஞ்சனி 21, கல்லூரி மாணவி. இவர் 2018 ஜூலை 15 அன்று திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் மெயின் ரோட்டில் நடந்து செல்லும் போது அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ் மோதியதில் 12 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு காயமடைந்தார்.

விபத்து இழப்பீடு கோரி ஸ்ரீவில்லிபுத்துார் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவருக்கு ரூ. 22 லட்சத்து 17 ஆயிரத்து 611 இழப்பீடாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாகம் வழங்க 2023ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை இழப்பீடு வழங்கவில்லை.

நீதிமன்றத்தில் சிவரஞ்சனி நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்சை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி நேற்று காலை பாலக்காட்டில் இருந்து செங்கோட்டைக்கு சென்ற அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சினை, ஸ்ரீவில்லிபுத்துார் சர்ச் சந்திப்பில் வைத்து ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.

Advertisement