இளம் விமானி பணி முதல் சர்வதேச விண்வெளி நிலையம் வரை…; மனம் திறந்து பேசிய சுபான்ஷூ சுக்லா

1


புதுடில்லி: இந்திய விமானப்படையில் விமானியாக பணியை தொடங்கியதில் இருந்து, சர்வதேச விண்வெளி நிலையம் சென்றது வரையிலான தனது பணி அனுபவங்களை இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா பகிர்ந்து கொண்டுள்ளார்.

மும்பையில் நடந்த தனியார் செய்தி சேனல் மாநாட்டில், சுபான்ஷூ சுக்லா பேசியதாவது: இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் செய்தேன். இந்தியக் கொடி விண்வெளி நிலையத்தை அடைந்தது இதுவே முதல் முறை. விண்வெளியில் இருக்கும் போது என்னிடம் பிரதமர் மோடி ஹிந்தியில் பேசினார். அந்த நினைவு எப்போதும் என்னுடன் இருக்கும்.

கிடைத்த பாக்கியம்



இந்திய விமானப்படையில் இளம் சோதனை விமானியாக மிக்-21, மிக்-29, ஜாகுவார் மற்றும் எஸ்யூ-30 போர் விமானங்களை பறக்கவிட்டேன். பின்னர் இந்தியாவின் முதல் விண்வெளி வீரர்களில் ஒருவராக மாறி உள்ளேன். டிராகன் விண்கலத்தில் விண்வெளிக்கு செல்ல எனக்கு வாய்ப்பு கிடைத்ததில் நான் பாக்கியவானாக உணர்கிறேன். இன்று என்னால் என்ன சிறப்பாகச் செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

பயப்படாதீங்க



தோல்விக்கு பயப்படக்கூடாது. நானும் பின்னடைவுகளைச் சந்தித்திருக்கிறேன், ஆனால் தோல்வி என்பது பயணத்தின் ஒரு பகுதியாகும். தோல்வியைக் கொண்டாடத் தொடங்க வேண்டும்.
தோல்வி என்பது முடிவு அல்ல. மாறாக நமது விருப்பம் மற்றும் முன்னேற்றம் அடைய ஒரு வாய்ப்பு ஆகும். உலகளாவிய விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா வளர்ந்து வருகிறது. மேலும் முன்னோக்கி கொண்டு செல்வதில் நமது விண்வெளி வீரர்கள் கவனம் செலுத்துவார்கள். இவ்வாறு சுபான்ஷூ சுக்லா பேசினார்.

Advertisement