பல்வேறு உரங்களின் திரவங்கள் வாங்க நிர்ப்பந்தம்: விவசாயிகள் யூரியா வாங்க.. தயக்கம்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளிலும் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல், மக்காச்சோளம், கரும்பு, வாழை உட்பட பல பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.

மாவட்டத்தின் கிழக்கு பகுதியான திருச்சுழி,அருப்புக்கோட்டை, பந்தல்குடி சாத்துார் நகரங்களை விட மேற்கு பகுதி நகரங்களான தேவதானம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு பகுதிகளில் அதிக அளவில் நெல் பயிரிடும் பணி நடக்கிறது.

இதற்காக யூரியா உரத்துடன் டி.ஏ.பி. போன்ற உரங்களையும் விவசாயிகள் கலந்து தெளிப்பது வழக்கம். இதனால் மாவட்டத்தில் ஒவ்வொரு நகரங்களிலும் யூரியா விற்பனை அதிகளவில் நடக்கிறது.

ஆனால் தற்போது யூரியா கொள்முதலின் போது இணை பொருட்களாக பல்வேறு உரங்களின் திரவங்களையும் வாங்க வேண்டும் என வியாபாரிகள் நிர்பந்திக்கப்படுவதால் அதனை கொள்முதல் செய்ய உரக்கடை உரிமையாளர்கள் தயங்குகின்றனர்.

இருந்தபோதிலும் விவசாயிகளில் நலன் கருதி வாங்கி விற்பனை செய்யும் பல உரக்கடைகளில் இணைபொருட்கள் விற்பனையாகாமல் தேங்கி பல லட்சம் ரூபாய் இழப்பிற்கு உரக்கடை உரிமையாளர்கள் ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது சம்பா பருவ நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தங்கள் விலை நிலங்களை தயார் செய்து நாற்றுகள் நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் யூரியா உரம் கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இது குறித்து வத்திராயிருப்பு விவசாயி பிரகலாதன் கூறுகையில், விவசாயத்தின் பிரதான உரமான யூரியா தற்போது கிடைப்பதில்லை. ஒரு சில கடையினரும் பல்வேறு ஆவணங்களை கேட்கின்றனர். தற்போது நெல் நடவு பணி மேற்கொள்ளப்படும் நிலையில் யூரியா உரம் கிடைப்பதில்லை. யூரியா,டி.ஏ.பி. பொட்டாஷ் போன்ற உரங்கள் தடையின்றி கிடைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இணை பொருட்கள் வாங்க வேண்டும் என நிர்பந்திக்க கூடாது என்றார்.

Advertisement