மாதா அம்ருதானந்தமயி தேவி பிறந்த நாள்; அம்ருதபுரியில் உற்சாக கொண்டாட்டம்!

அம்ருதபுரி, கேரளா: மாதா அம்ருதானந்தமயி தேவியின் 72வது பிறந்தநாள் விழா, கேரளா கொல்லம் அம்ருதபுரியில் அவரது பக்தர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



உலக அமைதி மற்றும் செழிப்பை வேண்டி, 72 மகா கணபதி ஹோமங்கள் மற்றும் பழங்குடி சமூகங்களின் பூர்வீக சடங்குகளுடன் விடியற்காலையில் விழாக்கள் தொடங்கின. மாதா அம்ருதானந்தமயி மடத்தின் துணைத் தலைவர் ஸ்வாமி அம்ருதஸ்வரூபானந்தபுரியின் சத்சங்கமும், இசை இயக்குனர் சரத் மற்றும் பின்னணிப் பாடகி மஞ்சரி தலைமையிலான பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.


காலை 9 மணிக்கு மாதா அம்ருதானந்தமயி தேவி விழா மேடைக்கு வருகைத் தந்தார். கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகர் வரவேற்றார். தொடர்ந்து ஸ்ரீ பாத பூஜை நடைபெற்றது.

இந்தியா முழுவதும் உள்ள பழங்குடி சமூகங்களின் பிரதிநிதிகள், மாதாவின் "ஒரே உலகம், ஒரே இதயம்" என்ற தொலைநோக்குப் பார்வையின் கீழ் ஒன்றிணைந்து சிறப்பு உலக அமைதிக்கான பிரார்த்தனையை நடத்தினர்.

மத்திய சுகாதார அமைச்சரும் பாஜக தேசியத் தலைவருமான ஜே.பி. நட்டா இதற்கான அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். தன்னலமற்ற சேவைக்கான மாதா அம்ருதானந்தமயி தேவியின் அயராத பங்களிப்பை அவர் பாராட்டினார்.

“மாதாவின் முழு வாழ்க்கையும் மனிதகுலத்திற்கு சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டு ள்ளது. ஒவ்வொரு வகையிலும், அவர் ஒரு உண்மையான முன்மாதிரியாகத் திகழ்கிறார். அவரது மனிதாபிமான முயற்சிகள் உலகின் அனைத்து பகுதிகளிலும் சென்றடைந்துள்ளன. அம்ருதா மருத்துவமனைகளின் சுகாதார சேவைகள் மிகவும் பாராட்டத்தக்கவை, மேலும் அம்ருதா கல்வித் துறையிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.


அம்ருதாவின் பெண்கள் முன்னேற்ற முயற்சிகளின் மூலம், சமூகத்தில் எண்ணற்ற பெண்கள் உயர்ந்துள்ளனர். சுனாமி மற்றும் வெள்ளம் போன்ற பேரிடர்களின் போதெல்லாம், அவரது கருணையானது நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக மீண்டும் மீண்டும் விளங்கி வருகிறது. அதனால்தான் அவரது பிறந்தநாள் விழா தனித்துவமான சிறப்பை அடைகிறது. ஏனெனில் அவை புதிய சேவை முயற்சிகளால் குறிக்கப்படுகின்றன,'' என்று நட்டா குறிப்பிட்டார்.
நிகழ்வின் ஒரு பகுதியாக, புகழ்பெற்ற அறிஞர் பி.ஆர்.நாதனுக்கு அம்ருதகீர்த்தி விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.


விருதைப் பெற்ற நாதன், தனது வாழ்க்கையையும், பணியையும் ஆழமாகக் கவர்ந்த கருணையே வடிவான மாதாவுக்கு இந்த விருதை அர்ப்பணிப்பதாகக் கூறினார். ஐக்கிய நாடுகள் சபையில் அம்மாவின் வரலாற்று சிறப்புமிக்க மலையாள உரையின் வெள்ளி விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, 72 பிரபலங்களின் சிந்தனைகளின் தொகுப்பான “அம்மாக்கடல்” வெளியீட்டுடன், “ஒரு உலகம், ஒரு இதயம்” என்ற கருப்பொருளில் பள்ளி மாணவர்களுக்கான மலையாளக் கட்டுரை, கலை மற்றும் பிற போட்டிகளும் தொடங்கி வைக்கப்பட்டன.


விழாவில் மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் குரியன் மற்றும் எல். முருகன், ஹரியானா அமைச்சர் ராஜேஷ் நகர், எம்.பி.,க்கள் சசி தரூர், கே.சி. வேணுகோபால் (ஏஐசிசி பொதுச் செயலாளர்), நீதிபதி ஜெயக்குமார், நீதிபதி நாகரேஷ், மகாமண்டலேஷ்வர் சந்தோஷானந்த மகராஜ், ஸ்வாமி சத்ஸ்வரூபானந்த சரஸ்வதி, ஸ்வாமி குருரத்னம் ஞானதபஸ்வி, ஸ்வாமி கீதானந்தன், ஸ்வாமி விசாலானந்த கிரி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், வி.முரளீதரன், எம்எல்ஏ மகேஷ், கும்மனம் ராஜசேகரன், வெள்ளாபள்ளி நடேசன், துஷார் வெள்ளாபள்ளி மற்றும் மேலும் பிற முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


வளாகத்தில் குழுமியிருந்த ஒவ்வொரு பக்தரையும் மாதா அம்ருதானந்தமயி தேவி நேரில் கண்டு ஆசீர்வதித்தார்.

Advertisement