சிறுமியை மணந்தாலும் குற்றம்... குற்றமே...! போக்சோ வழக்கில் மும்பை ஐகோர்ட் அதிரடி

6

மும்பை: 'பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமியை திருமணம் செய்து கொள்வதால் மட்டும் போக்சோ சட்ட வழக்கில் இருந்து குற்றஞ்சாட்டப்பட்டவர் தப்பிக்க முடியாது. வழக்கில் இருந்தும் அவரை விடுவிக்க முடியாது' என, மும்பை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


மஹாராஷ்டிராவில், 17 வயது சிறுமியை, 27 வயது முஸ்லிம் இளைஞர் காதலித்தார். இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமான நிலையில், சிறுமி கர்ப்பமானார்.

பதிவு திருமணம்




இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தார், இளைஞரின் குடும்பத்தாரிடம் சண்டையிட்டுள்ளனர். விஷயம் பூதாகரமானதால், இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

அதே சமயம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் இருவருக்கும் உடனடியாக திருமணம் நடந்தது. கடந்த மே மாதம் அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்தது.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, 'சிறுமியை திருமணம் செய்து கொண்டதால், தன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய வேண்டும்' என, அந்த இளைஞர் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதில், சிறுமியின் சம்மதத்துடனேயே உறவு வைத்துக் கொண்டதாகவும், 18 வயது நிரம்பியதும், பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், தன்னை சிறையில் அடைத்தால், தாயும், சேயும் பாதிக்கப்படுவர் என்பதால், வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என, அவர் கோரியிருந்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை தடுக்கும் போக்சோ சட்டத்தின்படி, சிறுவர், சிறுமியிடம் உறவு வைத்துக் கொள்வதற்கு ஒப்புதல் பெற முடியாது. 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாக்கவே போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது.

எனவே, பரஸ்பர ஒப்புதலுடன் உறவு கொண்டாலும், போக்சோ சட்டப்படி குற்றமாகவே கருத முடியும். மேலும், முஸ்லிம் மத சடங்குகளின்படி குற்றவாளிக்கும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் திருமணம் நடந்தாலும், அப்போது சிறுமிக்கு 18 வயது ஆகவில்லை. மேலும், குழந்தை பிறப்பின்போதும், சிறுமிக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை.

விடுவிக்க முடியாது




திருமணம் நடந்திருந்தாலும், சட்டவிரோதமான நடவடிக்கைகளை ஓரங்கட்டி விட முடியாது. எனவே, போக்சோ வழக்கில் இருந்து அவரை விடுவிக்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வழக்கு விசாரணையின்போது சிறுமியும் நேரில் ஆஜராகி, போக்சோ சட்டத்தில் இருந்து தன் கணவரை விடுவிப்பதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என கூறியிருந்தார். எனினும், அவரை விடுவிப்பது இந்த வழக்கிற்கு பொருந்தாது என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

Advertisement