சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலராக உயர்வு: எலான் மஸ்க் புதிய சாதனை!

3


வாஷிங்டன்: டெஸ்லாவின் பங்கு மீட்சி, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் ஏஐ நிறுவனத்தின் மதிப்பு உயர்ந்ததன் மூலம், எலான் மஸ்க் சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இதனால் அரை டிரில்லியன் செல்வத்தை சம்பாதித்த முதல் நபர் என்ற அந்தஸ்தை எலான் மஸ்க் பிடித்தார்.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் போர்ப்ஸ் நாளிதழ், உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ.,வும், எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 499.5 பில்லியன் டாலர். இதனால் எலான் மஸ்க் வரலாற்று சாதனை படைத்து இருக்கிறார்.



அரை டிரில்லியன் செல்வத்தை நெருங்கிய வரலாற்றில் முதல் நபர் என்ற அந்தஸ்தை எலான் மஸ்க் பிடித்தார். இதற்கு, டெஸ்லாவின் பங்கு மீட்சி, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் ஏஐ நிறுவனத்தின் மதிப்பு உயர்ந்தது காரணம். டெஸ்லா நிறுவன பங்கு தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது. மின்சார கார் தயாரிக்கும் நிறுவனத்தின் பங்குகள் இந்த ஆண்டு 14 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளன.


கடந்த புதன் கிழமை மட்டும் கிட்டத்தட்ட 4 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் மஸ்க் 7 பில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதிக்க வழி வகுத்தது. அதேநேரத்தில் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன் சொத்து மதிப்பு எலான் மஸ்கை விட மிகவும் பின்தங்கி தான் இருக்கிறது. தற்போது லாரி எலிசன் மொத்த சொத்து மதிப்பு 351.5 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.


கார்கள், ராக்கெட்டுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற பல தொழில்களில் எலான் மஸ்க் தனது அசாதாரண செல்வாக்கை நிரூபித்து காட்டி உள்ளார். உலகம் இதுவரை கண்டிராத பணக்காரர் என்ற இடத்தை எலான் மஸ்க் பிடித்துள்ளார். ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் என்பது இந்திய மதிப்பில் 8,800 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement