பராமரிப்பு இல்லாத கால்வாயால் குறைந்துபோன நிலத்தடி நீர்மட்டம்

மேலுார் : மேலுார் சுந்தரப்பான் குளத்திற்கு செல்லும் கால்வாய்களை நீர்வளத்துறையினர் பராமரிக்காததால் அருகில் உள்ள குடியிருப்பு ஆழ்துளை கிணறுகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மேலுார் 1வது வார்டில் 2.43 ஏக்கர் பரப்பளவில் நகராட்சிக்கு சொந்தமான சுந்தரப்பான் குளம் உள்ளது. அருகில் கொட்டக்குடிக்கு செல்லும் 6 வது கால்வாயில் இருந்து 3, 4 கிளைக் கால்வாய் வழியாக வரும் தண்ணீரால் இக்குளம் நிரம்பும். இதன் மூலம் குளத்தை சுற்றியுள்ள வெங்கடேஷ், முத்தமிழ் நகர் பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் மற்றும் குளக்கரையில் நகராட்சி அமைத்துள்ள ஆழ்துளை கிணறுகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயரும். கல்வாய் பராமரிப்பு இல்லாமல் தற்போது குளம் வறண்டு காணப்படுகிறது.

அப்பகுதி மக்கள் கூறியதாவது : குளத்தில் நீர் தேக்கினால் மட்டுமே இப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். தண்ணீர் பற்றாக்குறை நீங்கும். தற்போது தண்ணீரை சேமிக்காவிட்டால் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். பாசனத்திற்கு தண்ணீர் திறந்து 10 நாட்களான நிலையிலும் பெரியாறு கால்வாய்க்கு அருகில் உள்ள குளம் தண்ணீரின்றி வறண்டு கிடப்பதற்கு காரணம் அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையே. கால்வாய் உட்பட நீர் நிலைகள் பராமரிப்புக்கு என ஒதுக்கும் நிதியை நீர்வளத் துறையினர் பயன்படுத்துவதில்லை. இனியாவது கால்வாயை துார்வாரி குளத்தில் தண்ணீர் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

நீர்வளத்துறை, நகராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், தண்ணீர் கலங்கலாக வந்ததால் நிரப்பவில்லை. தற்போது தெளிவான தண்ணீர் வருவதால் ஓரிரு நாளில் நிரப்ப ஏற்பாடு செய்யப்படும் என்றனர்.

Advertisement