காவல்துறை முதல்வர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இல்லை: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

13


சென்னை: காவல்துறை முதல்வர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது நிரூபணம் ஆகி உள்ளது என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார்.


சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள காந்தி சிலைக்கு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் மரியாதை செலுத்தினார். பின்னர், நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: கரூரில் இன்றைக்கு 41 பேர் பரிதாபமாக இறந்து போய் உள்ளனர். யார் மின்தடை ஏற்படுத்தினார்கள். யார் செருப்பை தூக்கி வீசினார்கள். போலீசார் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்?

கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பே 30 ஆம்புலன்ஸ் வருவதற்கு காரணம் என்ன? முதல்வர் வந்தால், நல்ல இடத்தில் அனுமதி கொடுக்கிறார்கள். இவர்களுக்கு மட்டும் ஏன் அந்த இடத்தில் அனுமதி கொடுத்தார்கள். இதை எல்லாம் அவர்கள் சீர் தூக்கி பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கேள்வியும், பதிலும்!



நிருபர்: பாஜ பிடியில் விஜய் இருப்பதாக திருமாவளவன் கூறியுள்ளாரே?




நயினார் நாகேந்திரன் பதில்: விஜய் தன்னை பாஜவின் எதிரி என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போது அவர் எங்கள் பிடியில் இருப்பதாக சொல்வது சரியில்லை.



நிருபர்: பாஜ குழு கரூரில் ஆய்வு செய்து விட்டு சென்று உள்ளார்கள். அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?


நயினார் நாகேந்திரன் பதில்: அந்த குழு அறிக்கையாக ஆய்வு செய்ததை எழுதி கொடுத்து இருக்கிறார்கள். என்ன முடிவு செய்தார்கள் என்பதை பொறுத்து அதனை சொல்ல முடியும்.


நிருபர்: திருவண்ணாமலையில் போலீசாரே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்?



நயினார் நாகேந்திரன் பதில்: இது ஏதோ இன்றைக்கு, நேற்று நடக்கும் சம்பவம் அல்ல. திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து வேலியே பயிரை மேய்ந்தார் போல, காவல்துறையில் இதுபோன்றவர்கள் தமிழகத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள்.

இன்னும் அவர்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை முதல்வர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது நிரூபணம் ஆகி உள்ளது.

Advertisement