பாகிஸ்தானின் அடக்குமுறையே காரணம்: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடக்கும் போராட்டம் குறித்து இந்தியா கருத்து

3


புதுடில்லி: ''பாகிஸ்தானின் அடக்குமுறையால் ஏற்படும் விளைவுகளால் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்,'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இந்தியாவுக்கு சொந்தமான காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது. அதனை மீட்பதற்கான முயற்சிகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியாவின் ஒரு பகுதி என மத்திய அரசு பல முறை தெரிவித்துள்ளது.


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் பொருளாதார நெருக்கடி, அடிப்படை வசதிகள் இல்லாதது, பாகிஸ்தான் அதிகாரிகளின் சுரண்டல் ஆகியவற்றை கண்டித்து அங்கு பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.

இதற்கு அவாமி அதிரடி குழு தலைமையேற்று வருகிறது. மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால், பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் பலர் பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இதனை கண்டு அஞ்ச மாட்டோம். எங்களின் போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

இதனிடையே, மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல இடங்களில் போராட்டம் நடந்து வருவதையும், அதில் பாகிஸ்தான் அதிகாரிகள் காட்டும் கொடூரம் குறித்தும் எங்களுக்கு தகவல் வருகின்றன.


சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து வளங்களை கொள்ளையடிப்பதும், பாகிஸ்தானின் அடக்குமுறை அணுகுமுறையுமே இதற்கு காரணம் என நாங்கள் நம்புகிறோம். அங்கு நடக்கும் கொடூரமான மனித உரிமை மீறல்களுக்கு பாகிஸ்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement