தெரு நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் பயன்பாட்டிற்கு வந்தது

சிவகாசி: சிவகாசியில் தெரு நாய் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

சிவகாசியில் தேரடி பகுதி, மாடவீதி ரத வீதிகள் , பழைய விருதுநகர் ரோடு பஜார் பகுதி விளாம்பட்டி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் நாய்கள் நடமாடுகின்றன. இவைகள் மக்களைவிரட்டிக் கடிக்கின்றது.

சிவகாசி விஸ்வநத்தம் ரோட்டில் 10 ஆண்டுகளுக்கு முன்பு தெரு நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இந்த கருத்தடை அறுவை சிகிச்சை மையம் செயல்படாததால் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனால் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தை செயல்படுத்த மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று முதல்

நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் பயன்பாட்டிற்கு வந்தது.

மேயர் சங்கீதா, துணை மேயர் விக்னேஷ் பிரியா, கமிஷனர் சரவணன் துவக்கி வைத்தனர்.

இங்கு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டும், கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டும் துவக்கப்பட்டது. சிவகாசி அரசு கால்நடை மருத்துவமனை உதவி இயக்குனர் ஷர்மிளா தலைமையில் உதவி டாக்டர்கள் ராஜா, அனுசியா குழுவினர் நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை செய்தனர்.

Advertisement