திறந்த ஜீப்பில் முதல்வருடன் சென்ற அமைச்சர் பேரன்

மைசூரு: முதல்வர் சித்தராமையாவுடன் திறந்த ஜீப்பில், அமைச்சர் மஹாதேவப்பாவின் பேரன் சென்றதால் சர்ச்சை எழுந்துள்ளது. காங்கிரஸ் மேலிடம் விளக்கம் கேட்டுள்ளது.

மைசூரு தசராவின் சிகர நிகழ்ச்சியான, ஜம்பு சவாரி ஊர்வலம் நேற்று முன்தினம் நடந்தது. அரண்மனையில் இருந்து புறப்பட்ட ஜம்பு சவாரியை, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர் மஹாதேவப்பா, எம்.பி., யதுவீர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதற்கு முன்பு திறந்த ஜீப்பில், அரண்மனை வளாகத்தை சுற்றி வந்து, மக்களை பார்த்து முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் கையசைத்தபடி சென்றனர்.

இவர்களுடன் ஜீப்பில் 'கூலிங் கிளாஸ்' போட்டு ஒரு சிறுவனும் நின்றிருந்தார். அந்த சிறுவனின் புகைப்படம், சமூக வலைத்தளங்களில் வைரலானது. யார் அந்த சிறுவன், முதல்வருடன் திறந்த ஜீப்பில் செல்ல அனுமதி கொடுத்தது யார் என்று கேள்வி எழும்பியது.

அந்த சிறுவன், அமைச்சர் மஹாதேவப்பாவின் 16 வயது பேரன் என்பது தெரிய வந்தது. இதனால் சர்ச்சை கிளம்பி உள்ளது. அரசு நிகழ்ச்சியில், குடும்பத்தினரை அனுமதிப்பது எந்த விதத்தில் நியாயம் என, பா.ஜ., கேள்வி எழுப்பியது. காங்கிரஸ் மேலிடமும், கட்சியின் தலைவரான துணை முதல்வர் சிவகுமாரிடம் விளக்கம் கேட்டுள்ளது.

Advertisement