'கள்ளக்குறிச்சிக்கு போகாத முதல்வர் மணிப்பூர் பற்றியெல்லாம் பேசலாமா?'

2

சென்னை : 'ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு, பா.ஜ.,வை விமர்சிக்கவோ, கேள்வி கேட்கவோ என்ன தகுதி இருக்கிறது' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:



கள்ளக்குறிச்சியில், தி.மு.க., சாராய வியாபாரிகள் விற்ற சாராயத்தால், 66 உயிர்கள் பறிபோயின. அவர்கள் குடும்பத்தினரை சந்திக்க சென்றீர்களா முதல்வர் ஸ்டாலின்; கொடுந்துயரத்திற்கு ஆளான புதுக்கோட்டை வேங்கைவயல் மக்களை சென்று சந்தித்தீர்களா?

தங்கள் விவசாய நிலங்களை பாதுகாக்க போராடிய திருவண்ணாமலை, மேல்மா விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டீர்கள்; அவர்கள், தலைமை செயலகம் வந்தபோது, சந்திக்க மறுத்து போலீசாரை வைத்து கைது செய்தது ஏன்? தென் மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டு, மக்கள் அல்லல்பட்டபோது சந்திக்க மறுத்து, போலீசாரை வைத்து கைது செய்தது ஏன்?

ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு, பா.ஜ.,வை விமர்சிக்கவோ, கேள்விகள் கேட்கவோ என்ன தகுதி இருக்கிறது?

கட்சி துவங்கிய காலத்தில் இருந்து, இதுவரை ஒரு தேர்தலை கூட, தனித்து நின்று எதிர்கொள்ள முடியாத கட்சி தி.மு.க., உங்கள், கோழைத்தனமான வரலாறு இப்படி இருக்கையில், வீண் சினிமா வசனங்கள் ஏன்?

கரூரில் நடந்த சம்பவம் தொடர்பாக, நீங்கள் தான் விசாரணை ஆணையம் அமைத்து வீட்டீர்களே.

அப்படி இருந்தும் உங்களுக்கு ஏன் இத்தனை பதற்றம்? கள்ளக்குறிச்சிக்குப் போய் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லாத முதல்வர் ஸ்டாலின், மணிப்பூர் பற்றி பேச என்ன தகுதி உள்ளது? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement