'இ - பாஸ்' திட்டம் தோல்வி; ஊட்டியில் தீரவில்லை நெரிசல்

8

கூடலுார்: 'இ - பாஸ்' திட்டத்தை நடைமுறைப்படுத்தியும், ஊட்டியில் நெரிசல் தீராததால் அந்த திட்டமே தோல்வி அடையும் நிலை உருவாகி உள்ளது.


நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான ஊட்டிக்கு, அதிக வாகனங்கள் வந்து செல்வதால் சுற்றுச்சூழல் பாதிப்பு, நெரிசலை தவிர்க்க, ஐகோர்ட் உத்தரவுப்படி, 2024 மே, 7 முதல் இ -- பாஸ் திட்டம் நடைமுறைக்கு வந்தது.


இதற்காக, தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஊட்டி செல்லும் நெடுஞ்சாலைகளில், இ பாஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டது. சீசன் நேரங்களில், வார இறுதி நாட்களில், 8,000 வாகனங்கள், வார நாட்களில் 6,000 வாகனங்கள் வரை அனுமதிக்கப்பட்டன.



சீசன் அல்லாத நேரங்களில், வாகன எண்ணிக்கையில் எந்த கட்டுப்பாடும் இல்லை. மேலும், இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்களுக்கு, சோதனை சாவடியில் நடுரோட்டில் வாகனத்தை நிறுத்தி, வாகன உரிமையாளர்கள் இ - பாஸ் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதற்கு உடனடி ஒப்புதல் வழங்கி, பாஸ் போட்ட பிறகே, வாகனம் அனுமதிக்கப்படுகிறது.

இதனால் பாஸ் எடுத்து வந்தாலும், மற்ற வாகனங்கள் வரிசையில் அணிவகுத்து நிற்க வேண்டியுள்ளது. இம்மாதிரியான போக்கால், நெரிசலை குறைக்க அமல்படுத்தப்பட்ட இ -பாஸ் திட்டமே தோல்வி அடைந்துள்ளதாக வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர்.



வாகன ஓட்டிகள் கூறுகையில், 'சுற்றுலா பயணியர் திட்டமிட்டு தான் ஊட்டிக்கு வருகின்றனர். அவ்வாறு வருவோர் முன்கூட்டியே இ பாஸ் எடுத்து வரவும், 24 மணி நேரத்திற்கு முன் பாஸ் எடுக்காத வாகனங்களுக்கு, அனுமதி மறுப்பு அல்லது ஏதாவது கட்டணம் வசூலித்து அனுமதி வழங்குவது போன்ற கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும்.


'அப்போது தான் அனைவரும் முன்கூட்டியே பாஸ் எடுத்து வருவர். இதனால் சோதனை சாவடிகளில் மணிக்கணக்கில் வரிசை கட்டி நிற்க வேண்டியது தவிர்க்கப்படும். அதே போல, பசுமை வரி வசூலிக்கும் பணிக்கு தாமதத்தை தவிர்க்க கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும்' என்றனர்.

Advertisement