போரூர் சிறுமி கொடூர கொலை வழக்கில் தஷ்வந்த் விடுதலை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி; சென்னை அருகே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வழக்கில், வாலிபர் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்த சுப்ரீம்கோர்ட், அவரை வழக்கில் இருந்தும் விடுவித்து உத்தரவிட்டு உள்ளது.
2017ம் ஆண்டு சென்னையை அடுத்த போரூரில் 6 வயது சிறுமியை பக்கத்து வீட்டில் இருந்த தஷ்வந்த் என்ற வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் எரித்துக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதில் ஏற்பட்ட தாமதத்தை சுட்டிக்காட்டி தஷ்வந்த் ஜாமின் கேட்க, சென்னை ஐகோர்ட் அவருக்கு ஜாமின் வழங்கியது.
அதன் பின்னர் வீட்டில் இருந்த தனது தாயை அடித்துக் கொன்றுவிட்டு, நகைகளுடன் மும்பைக்கு பறந்தார். பலகட்ட தேடுதல் வேட்டைக்குப் பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம், 2018ம் ஆண்டு தஷ்வந்த்க்கு மரண தண்டனை விதித்தது.
தாயை கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில், தஷ்வந்த் தந்தை பிறழ் சாட்சியாக மாறியதால் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி செங்கல்பட்டு நீதிமன்றம் விடுவித்தது. ஆனால் மரண தண்டனையை உறுதி செய்ததால், அதை எதிர்த்து, தஷ்வந்த் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
இந் நிலையில், 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி தஷ்வந்தை சுப்ரீம் கோர்ட் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. வீடியோக்கள், சிசிடிவி காட்சிகள், மரபணு பரிசோதனை ஒத்துப்போக வில்லை என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளனர்.
முன்னதாக தமது தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுவிட்ட நிலையில் தற்போது சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டு உள்ளார்.










மேலும்
-
பஸ்சை விட்டு பிரிய மனமில்லாத பரமசிவம்.
-
ஆந்திராவில் பட்டாசு ஆலையில் தீ: 6 பேர் பரிதாப பலி
-
பயங்கரவாதிகள் தாக்குதல்: பாக்., ராணுவத்தினர் 11 பேர் பலி
-
தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்கள், நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
6 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது: ஸ்பெயினில் 4 பேர் பலி
-
ஒரு ஜிபி டேட்டா ஒரு கப் டீயை விட விலை குறைவு: பிரதமர் மோடி பேச்சு