தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது * பா.ஜ., நயினார் நாகேந்திரன் சாடல்

திருநெல்வேலி:''தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது. கரூரில் நடந்த சம்பவம் இதற்கு சாட்சியமாக உள்ளது. அங்கு சென்றால் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம்,'' என, திருநெல்வேலியில் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.

அவர் மேலும் கூறியதாவது:

தி.மு.க., ஆட்சியில் நடக்கக்கூடாதவை அனைத்தும் தொடர்ந்து நடக்கின்றன. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு பிறகு கரூரில் 41 பேர் இறந்துள்ளனர். இது தி.மு.க., அரசின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவையே காட்டுகிறது. இதற்குக் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களைச்சந்திக்க நடிகர் விஜய் பாதுகாப்பு கோரி மனு அளித்துள்ளார். ஆனால் அங்கு சென்றால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. மக்களுக்கே பாதுகாப்பு இல்லாத இந்த ஆட்சியில் விஜய் உயிருக்கும் ஆபத்து உள்ளது. மக்களைப் பாதுகாக்கத் தவறிய இந்த அரசுக்கு வரவிருக்கும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

நான்கரை ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வரும் தி.மு.க., அரசுக்கு எதிராக மக்களிடையே மிகப்பெரிய அதிருப்தி நிலவுகிறது. மக்கள் தாங்களாகவே ஒன்றிணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறார்கள். இந்த ஆட்சியில் குழந்தைகள் மீதான பாலியல் சம்பவங்களும், பெண்கள் மீது வன்முறை சம்பவங்களும் அதிகரித்துள்ளன. மதுரையில் அ.தி.மு.க., நிறுவனர் எம்.ஜி.ஆர்., சிலை கூட சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. இது அரசு எவ்வளவு மோசமான நிலையில் உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.

தி.மு.க., அரசைக்கண்டித்து அக்., 12 மதுரையில் தொடங்கும் சுற்றுப்பயணத்தில் பீகார் தேர்தல் காரணமாக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்நது முடியவில்லை. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது. கரூர் சம்பவத்தையொட்டி விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின்படி வாகனத்தில் இருந்தே பிரசாரம் நடக்கும் என்றார்.

Advertisement