200 ஆப்கன் தலிபான்களை கொன்றோம்; சொல்கிறது பாகிஸ்தான் ராணுவம்

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தான் எல்லையில் நடந்த மோதலில் 200க்கும் மேற்பட்ட தலிபான்களை கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் நுார் வாலி மெஹ்சுத்தை குறி வைத்து, பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடியாக ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானில் எல்லையில் புகுந்து தாக்குதலை நடத்தியது. இதில், 58 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், கிட்டத்தட்ட 25 ராணுவ முகாம்களை கைப்பற்றிவிட்டதாகவும் ஆப்கன் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் எல்லையில் நடந்த மோதலில் 200 தலிபான்களை கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது, ஆப்கனின் அறிவிப்புக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக, இந்த அறிக்கை அமைந்துள்ளது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது; பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில், அக்.,11 மற்றும் 12ம் தேதிக்கு இடைப்பட்ட இரவில், ஆப்கானிஸ்தானின் தலிபான்களும், தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் அமைப்பும் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். கோழைத்தனமான இந்த தாக்குதல் பயங்கரவாதத்தின் மூலம் எல்லைப் பகுதிகளை சீர்குலைக்கும் மோசமான நடவடிக்கை.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து, தலிபான்கள் முகாம்கள், பயங்கரவாத பயிற்சி மையங்களை பாகிஸ்தான் ராணுவம் தாக்கியது. இந்தத் தாக்குதலில் 23 பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரிழந்தனர். 29 பேர் காயமடைந்தனர். அதேவேளையில், 200க்கும் மேற்பட்ட தலிபான்கள் கொல்லப்பட்டனர், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



