தான்சானியாவில் தேர்தல் முடிவுக்கு எதிராக வெடித்தது மோதல்: 700 பேர் பலி என அச்சம்

2

டொடோமா: தான்சானியாவில் அதிபர் தேர்தல் முடிவை ஏற்க மறுத்து வெடித்த வன்முறையில் கடந்த 3 நாட்களில் 700 பேர் இறந்திருக்கலாம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.



கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் நேற்று முன்தினம்( அக்.29) அதிபர் தேர்தல் நடந்தது. அதில் தற்போதைய அதிபரான சிசிஎம் கட்சியைச்சேர்ந்த சமியா சுலுஹூ ஹசன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த தேர்தல் முடிவை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி, தேர்தலில் மோசடி நடந்ததாக குற்றம்சாட்டியது. இதனால், அந்நாட்டில் போராட்டம் வெடித்துள்ளது.


எதிர்க்கட்சியினர் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதில் வன்முறை வெடித்துள்ளது. டார் எஸ் சலாம், மவான்சா, டொடோமா உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் நடக்கிறது. போராட்டக்காரர்கள் சாலைகளில் டயர்களை எரித்தனர். அவர்களை போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால், போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதனையடுத்து ராணுவத்தினர் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக அந்நாட்டில் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதுடன், இணையதள சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு நிருபர்கள் செய்தி சேகரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக அங்கு நடக்கும் மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என எதிர்க்கட்சி தலைவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தர் எஸ் சலாம் பகுதியில் 350 மற்றும் மவான்சா பகுதியில் 200க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement