டில்லி அணி சாம்பியன்: புரோ கபடி லீக் தொடரில்

புதுடில்லி: புரோ கபடி லீக் தொடரில் டில்லி அணி சாம்பியன் ஆனது. விறுவிறுப்பான பைனலில் 31-28 என்ற கணக்கில் புனே அணியை வீழ்த்தியது.

இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் நடந்தது. தமிழ் தலைவாஸ், மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்றன. டில்லியில் நடந்த பைனலில் புனே, டில்லி அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய டில்லி அணியினர், புனே அணியை ஒரு முறை 'ஆல்-அவுட்' செய்தனர். முதல் பாதி முடிவில் டில்லி அணி 20-14 என முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் ஓரளவு எழுச்சி கண்ட புனே அணிக்கு 14 புள்ளி மட்டும் கிடைத்தது. ஆட்டநேர முடிவில் டில்லி அணி 31-28 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 2வது முறையாக (2021-22, 2025) சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் 2வது இடத்தை (தலா 2 முறை) ஜெய்ப்பூர் அணியுடன் பகிர்ந்து கொண்டது டில்லி. முதலிடத்தில் பாட்னா அணி (3 முறை) உள்ளது.


டில்லி அணிக்கு நீரஜ் நார்வல் (9 புள்ளி), அஜின்கியா பவார் (6) கைகொடுத்தனர். புனே அணி சார்பில் ஆதித்யா ஷிண்டே 10 புள்ளி பெற்றார்.

ரூ. 3 கோடி பரிசு
புரோ கபடி சாம்பியன் டில்லி அணிக்கு கோப்பையுடன், ரூ. 3 கோடி பரிசாக வழங்கப்பட்டது. புனே அணிக்கு ரூ. 1.8 கோடி கிடைத்தது.

Advertisement