வறுமையை அருகில் இருந்து பார்த்துள்ளேன்: பிரதமர் மோடி

21


நயா ராய்ப்பூர்: '' நான் வறுமையை அருகில் இருந்து பார்த்துள்ளேன். இதனால் பிரதமராக பதவியேற்ற பிறகு ஏழைகளின் நலனில் அக்கறை செலுத்தி வருகிறேன்,'' எனப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.


சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டு 25 ஆண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு நயா ராய்ப்பூர் பகுதியில் நடந்த விழாவில் பிரதமர் மோடி ரூ.14,260 கோடி மதிப்பு நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைத்தார்.


இதனைத் தொடர்ந்து மோடி பேசியதாவது: சத்தீஸ்கர் உருவாக்கப்பட்டதற்கு முன்பும் இந்தப் பகுதியை பார்த்துள்ளேன். கடந்த 25 ஆண்டுகளாக இந்த மாநிலத்தின் பயணத்தை பார்த்து வருகிறேன். சத்தீஸ்கர் மாநிலம் வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. வறுமையை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். இதனால், பிரதமரான பிறகு ஏழைகளின் நலனில் அக்கறை செலுத்தி வருகிறேன்.


கடந்த 11 ஆண்டுகளுக்கு பிறகு நாடு முழுதும் 125 மாவட்டங்களில் நக்சல் பாதிப்பு இருந்தது. தற்போது 3 மாவட்டங்களில் மட்டுமே அவர்களின் ஆதிக்கம் உள்ளது. நக்சல்கள் ஆயுதங்களை கீழே போட்டு வருகின்றனர். நக்சல் பாதிப்பில் இருந்து நாடு முற்றிலும் விடுதலை பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை.


2000ம் ஆண்டுக்கு பிறகு சத்தீஸ்கரில் அனைத்து தலைமுறையும் மாறியுள்ளது. அதற்கு முன்பு அப்படி யாரும் பார்த்து இருக்க மாட்டார்கள். மாநிலம் உருவாக்கப்பட்ட போது, கிராமங்களை அணுகுவது எளிதானது இல்லை. கிராமங்கள் சாலை வசதி இல்லாமல் இருந்தன. ஆனால் இன்று மாநிலத்தில் சாலை இணைப்பு 40 ஆயிரம் கி.மீ., தாண்டியுள்ளது.


மக்களின் வாழ்க்கையில் உள்ள இடர்பாடுகளை அகற்ற அரசு பாடுபட்டு வருகிறது. இன்று மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது. இணைய வசதியும் கிடைக்கிறது. சாதாரண குடும்பங்களுக்கு கேஸ் இணைப்பு கனவாக இருந்தது. ஒரு வீட்டக்கு புதிதாக இணைப்பு பெறுவதை பார்த்த மக்கள், தங்களது வீட்டுக்கும் அப்படி இணைப்பு வராதா என ஏங்கினர். உஜாலா திட்டம் மூலம் கேஸ் இணைப்பு கிராமங்களை அடைந்துள்ளது. ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியின மக்களுக்கு கிடைக்கிறது. தற்போது காஸ் இணைப்பை தாண்டி ஒவ்வொரு வீட்டு சமையல் அறைக்கும், குடிநீர் கிடைக்க செய்து வருகிறோம். பைப் மூலம் குறைந்த விலையில் கேஸ் வழங்குவதற்கு உறுதிபூண்டுள்ளோம். இவ்வாறு பிரதமர் பேசினார்.

Advertisement