துவம்சம் செய்த வாஷிங்டன் சுந்தர்; ஆஸி.,யைத் தோற்கடித்தது இந்தியா

2

ஹோபர்ட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டியில் இந்தியா தோற்றது.

இந்த சூழலில், முக்கியமான மூன்றாவது போட்டி இன்று (நவ.,02) ஹோபர்ட், பெல்லிரைவ் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு ஹெட் (6), இங்லீஷ் (1), மார்ஷ் (11), ஓவன் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி, இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தது. ஆனால், மறுமுனையில் தனியொரு ஆளாக நிலைத்து நின்று விளையாடிய டிம் டேவிட் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். 38 பந்துகளில் 74 ரன் குவித்து அணியை சரிவில் இருந்து மீட்டார்.

அதன்பிறகு, பேட்டிங் வந்த ஸ்டொய்னிஸ் மற்றும் ஷார்ட் அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர். ஸ்டொய்னிஸ் 39 பந்துகளில் 64 ரன் குவித்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன் சேர்த்தது.

இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டும், துபே ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து, பேட் செய்த இந்திய அணிக்கு துவக்கம் சுமாராக அமைந்தாலும், அபிஷேக் ஷர்மா (25), சூர்யகுமார் யாதவ் (24), திலக் வர்மா (29) ஆகியோர் தங்களின் பங்களிப்பை கொடுத்தனர். இறுதியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் அதிரடியாக விளையாடினார். 23 பந்துகளில் 49 ரன் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், இந்திய அணி 19.3 பந்தில் இலக்கை அடைந்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில், 3 போட்டிகள் நிறைவடைந்த நிலையில், 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது.

Advertisement