புகையிலை பொருட்கள் கடத்திய கல்லுாரி மாணவர் கைது

திருக்கோவிலுார்: பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை - திருக்கோவிலுார் மார்க்கத்தில், மணலுார் பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் குலதீபமங்கலம், அய்யப்பன் நகர், பஸ் நிறுத்தத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, திருவண்ணாமலை இருந்து திருக்கோவிலுார் நோக்கி வந்த ஹூண்டாய் ஐ20 காரை நிறுத்தி சோதனையிட்டனர்.

காரில் அரசால் தடை செய்யப்பட்ட 25 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தது.

இதன் மதிப்பு 25 ஆயிரம் ரூபாய் ஆகும். விசாரணையில், காரில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது விழுப்புரம் மாவட்டம், வடகரைத்தாழனுாரை சேர்ந்த முத்து மகன் லட்சுமணன், 19; என்பதும், அரசு கல்லுாரியில் 2ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.

இது குறித்து மணலுார் பேட்டை போலீசார் வழக்கு பதிந்து புகையிலை பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்து லட்சுமணனை கைது செய்தனர்.

Advertisement