அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியதால் ஆமதாபாத் விபத்து விசாரணையில் தொய்வு

புதுடில்லி: அமெரிக்க அரசின் நிர்வாக முடக்கத்தால், குஜராத்தின் ஆமதாபாதில் நிகழ்ந்த, 'ஏர் இந்தியா' விமான விபத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்காக அந்நாட்டின் சட்ட நிறுவனமான, 'பீஸ்லி ஆலன்' தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணை தடைபட்டுள்ளது.

குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனுக்கு, 200க்கும் மேற்பட்டோருடன், ஜூன் 12ல் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானம், புறப்பட்ட சில வினாடிகளிலேயே அருகே உள்ள மருத்துவக் கல்லுாரி விடுதியில் மோதி விபத்துக்கு உள்ளானது.

நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில், 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இது குறித்து, ஏ.ஏ.ஐ.பி., எனப்படும் விமான விபத்துகளை விசாரிக்கும் புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது.

சில மாதங்களுக்கு முன், முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியான நிலையில், இறுதி அறிக்கை விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்த, 125-க்கும் மேற்பட்டோரின் குடும்பங்களுக்காக, அமெரிக்க சட்ட நிறுவனமான, 'பீஸ்லி ஆலன்' அந்நாட்டில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

விபத்து தொடர்பான தகவல்கள், படங்கள், வீடியோக்கள், வரைபடங்கள், முக்கியமாக, விமானிகள் அறையில் பதிவான ஆடியோ விபரங்களை கேட்டு, அமெரிக்க அரசின் விமான போக்குவரத்து நிர்வாகத்துக்கு, பீஸ்லி ஆலன் நிறுவனம், ஆக., 13ல் கடிதம் எழுதியது.

ஆனால், இதுவரை எந்த பதிலும் வரவில்லை. தற்போது அமெரிக்காவில், பட்ஜெட் தொடர்பாக அரசு நிர்வாகம் முடக்கப்பட்டு உள்ளதால், அந்நாட்டின் விமான போக்குவரத்து நிர்வாகத்திடம் இருந்து பதில் வருவது, மேலும் தாமதமாகலாம் என, கூறப்படுகிறது.


பதில் கிடைத்ததும், அதனடிப்படையில், 'போயிங்' நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடரவும், 'பீஸ்லி ஆலன்' திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement