'வாக்காளர் பட்டியலையும் குடியுரிமை சட்டத்தையும் எப்படி ஒப்பிட முடியும்?'

சென்னை : “தி.மு.க., மீது ஊழல் குற்றச்சாட்டு வரும்போதெல்லாம், அதை திசைதிருப்ப வேறு விஷயங்களை கையில் எடுப்பது வாடிக்கை,” என, மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்தார்.

அவரது பேட்டி:

நகராட்சி நிர்வாக துறை பணி நியமனத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இந்நிலையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அனைத்து கட்சி கூட்டம் என்ற பெயரில் மிகப்பெரிய நாடகத்தை நடத்தியிருக்கிறார். தி.மு.க., மீது எப்போதெல்லாம் ஊழல் குற்றச்சாட்டு வருகிறதோ, அதை திசைதிருப்ப, வேறு விஷயங்களை கையில் எடுப்பது வாடிக்கை. அப்படித்தான், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை கையில் எடுத்து உள்ளனர்.

இந்த சிறப்பு வாக்காளர் திருத்தத்தின் நோக்கமே, இரட்டை வாக்காளர்கள், இறந்துபோன வாக்காளர்கள், போலி வாக்களர்களை களைவது தான். ஓட்டளிக்க உரிமை உள்ளவர்களில், ஒருவர் கூட விடுபடக்கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் கவனமாக உள்ளது.

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, 75 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். சென்னையில், கொளத்துார் தொகுதியில் கூட போலி வாக்காளர்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் வருகின்றன. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியில், தமிழக அரசு ஊழியர்கள் தான் ஈடுபட உள்ளனர். அவர்கள் மீது, தி.மு.க.,வுக்கு நம்பிக்கை இல்லையா?

வாக்காளர் பட்டியலையும், குடியுரிமை சட்டத்தையும் எப்படி ஒப்பிட முடியும்? குடியுரிமை சட்டம், வெளிநாடுகளில் இருந்து வந்து, இங்கு தங்கி உள்ளவர்களுக்கானாது. வாக்காளர் சிறப்பு திருத்த பணி என்பது போலி, உயிரிழந்த, இரட்டை வாக்காளர்களை நீக்குவதற்கான பணி.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement