'உனக்காக மனைவியை கொன்றேன்': காதலிக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பிய டாக்டர்

4

பெங்களூரு: 'உனக்காக, என் மனைவியை கொன்று விட்டேன்' என, காதலிக்கு பெங்களூரு டாக்டர் மகேந்திர ரெட்டி குறுந்தகவல் அனுப்பியது தெரியவந்துள்ளது.


கர்நாடக மாநிலம் பெங்களூரு, மாரத்தஹள்ளியைச் சேர்ந்தவர் டாக்டர் கிருத்திகா ரெட்டி, 28. இவருக்கு மயக்க மருந்து செலுத்தி கொன்றதாக, இவரது கணவரான டாக்ட ர் மகேந்திர ரெட்டி 36, கடந்த மாதம் மாரத்தஹள்ளி போலீசார் அவரை கைது செய்தனர்.

பல பெண்களுடன் உறவில் இருந்ததைக் கண்டித்த கிருத்திகாவை மகேந்திர ரெட்டி கொலை செய்ததாக, கிருத்திகா குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.


மனைவிக்கு உடல்நல பிரச்னைகள் இருந்ததால் ஏற்பட்ட வெறுப்பில், மயக்க ஊசி செலுத்தி கொன்றதையும், மாமனார் சொத்துகளை அபகரிக்க நாடகமாடியதையும், போலீஸ் விசாரணையில், மகேந்திர ரெட்டி ஒப்புக்கொண்டார்.



இதற்கிடையில், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட, இரண்டு மொபைல் போன்களை போலீசார் ஆய்வு செய்தனர். பெரும்பாலான குறுந்தகவலை அனுப்பிய பின் அழித்தது தெரிந்தது.



அழித்த தகவல்களை மீட்டெடுக்க, தடயவியல் ஆய்வகத்திற்கு மொபைல் போன்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அங்கிருந்து, அழிக்கப்பட்ட குறுந்தகவல்கள் மீட்கப்பட்டு உள்ளன.



கிருத்திகா ரெட்டி இறந்த அன்று, 'போன்பே மெசேஜ்' மூலம், இளம்பெண் ஒருவருக்கு மகேந்திர ரெட்டி குறுந்தகவல் அனுப்பி உள்ளார். அதில், 'உனக்காக, என் மனைவியை கொன்று விட்டேன்' என்று குறிப்பிட்டு இருந்தார்.


மேலும் சில பெண்களுக்கு, 'வாட்ஸாப்'பில் மெசேஜ் அனுப்பியதும் தெரிந்துள்ளது. மகேந்திர ரெட்டியுடன் தொடர்பில் இருந்த பெண்களிடமும் விசாரிக்க, போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement