சீமை கருவேல மரங்களால் பாலாற்றில் தடைபடும் நீரோட்டம்

பழையசீவரம்: பழவேரி பாலாற்றில் நீரோட்டத்திற்கு தடையாக உள்ள சீமை கருவேல மரங்களை வேரோடு அகற்ற வேண்டும் என, பாலாற்று பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழையசீவரம் பாலாற்று தடுப்பணை அருகே துவங்கி, பழவேரி, பினாயூர், சாத்தணஞ்சேரி வரையிலான பாலாற்று படுகைகளில், 10 ஆண்டுகளுக்கு முன் அரசு அனுமதி பெற்ற தனியார் மணல் குவாரிகள் செயல்பட்டன. அப்போது, அனுமதித்த அளவை காட்டிலும், கூடுதலான துாரம் மற்றும் அதிக ஆழம் தோண்டி மணல் அள்ளப்பட்டது.

இத்தகைய வீதிமீறல் காரணமாக பழவேரி உள்ளிட்ட பாலாற்று படுகைகளில் மணல் இல்லாத நிலை தற்போது வரை தொடர்கிறது. இவ்வாறு மணல் பரப்பு இல்லாத பாலாற்று படுகைகளில், சில ஆண்டுகளாக சீமை கருவேல மரங்களின் வளர்ச்சி அபரிமிதமாக அடைந்துள்ளது.

ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே வளர்ந்திருந்த இம்மரங்கள், தற்போது ஆற்றின் பல்வேறு பகுதிகளில் பரவி காணப்படுகின்றன. சீமை கருவேல மரங்களால், பழையசீவரம் தடுப்பணை அடுத்த பழவேரி பாலாற்றில் துவங்கி, பினாயூர் வரையிலான பாலாறு அடர்ந்த முள் காடாக உள்ளது.

இதனால், பாலாற்றில் வெள்ளப்பெருக்கெடுத்தும் பழவேரி பாலாற்று படுகையில் சீமை கருவேல மரங்களால் தண்ணீர் உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்க இயலாமல் பாதிக்கும் நிலை உள்ளது.

எனவே, பாலாற்று படுகைகளில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை வேரோடு அகற்ற, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாலாற்று பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement