'வந்தே மாதரம்' எழுதி 150 ஆண்டு நிறைவு: ஓராண்டு கொண்டாட மத்திய அரசு உத்தரவு

2

புதுடில்லி : 'வந்தே மாதரம்' பாடல் எழுதப்பட்டு, 150 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தி ஓராண்டு கொண்டாட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


வங்க கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி, 'வந்தே மாதரம்' பாடலை, 1875ம் ஆண்டு நவம்பர் 7ல் அட்சய நவமி நாளில் எழுதியதாக நம்பப்படுகிறது. சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய இந்த பாடல், 'ஆனந்த மடம்' என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த பாடல் எழுதப்பட்டு, 150 ஆண்டு நிறைவடைவதை இசை, கலை நிகழ்ச்சி நடத்தி ஓராண்டு கொண்டாட மத்திய கலாசார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.


இது குறித்து மத்திய கலாசார துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தேச பக்தியின் சின்னமாக விளங்கும், 'வந்தே மாதரம்' பாடல் நாட்டின் ஒற்றுமை மற்றும் சுயமரியாதையை கவிதையாக வெளிப்படுத்துகிறது. இது சமூக, அரசியல் மற்றும் கலாசார ரீதியாக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த பாடல் எழுதப்பட்டு, 150 ஆண்டுகள் நிறைவடைவதை நான்கு கட்டமாக நினைவுகூர திட்டமிடப்பட்டுள்ளது. அதன் படி இன்று துவங்கி நவ.,14 வரையிலும் முதல் கட்டமாகவும், குடியரசு தினத்தையொட்டி 2026 ஜனவரி 19 - 26 வரை இரண்டாம் கட்டமாகவும், 2026 ஆக.,7 - 15 வரை மூன்றாம் கட்டமாகவும், பின் 2026 நவ.,1-7 வரை கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாட வேண்டும்.

இதற்காக, 'வந்தே மாதரம்' பாடலை இன்று நாடு முழுதும் ஒரே நேரத்தில் பாடி அதை பதிவு செய்து பிரசார இணையதளத்தில் பதிவேற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர மத்திய ஆயுதப்படை போலீசார் மற்றும் மாநில போலீசாரின் இசைக்குழுவினர் ஆண்டு முழுதும் இசை நிகழ்ச்சி நடத்தவும் கண்காட்சிகள் நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement