தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது: இபிஎஸ்

13


கோவை: தமிழகத்தில் அதிமுக தான் ஆட்சி அமைக்கும். அதிமுக முதல்வர் வேட்பாளர் நான் தான் என அக்கட்சி பொதுச்செயலாளர் இபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கோவையில் நிருபர்களிடம் இபிஎஸ் கூறியதாவது: திமுக ஆட்சியிகளில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. பாலியல் வன்கொடுமைகள் சர்வசாதாரணமாக நடக்கிறது. குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் கொஞ்சம் கூட அச்சம் இல்லாமல், போலீசார் மீது பயமில்லாமல் தொடர் நிகழ்வுகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது. அரசு இருக்கிறதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் மாணவியை போலீஸ்காரர் பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்.

6,999 பாலியல் வன்கொடுமைகள்



போலீசார் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதற்கு மாறாக இப்படிப்பட்ட பாலியல் வன்கொடுமை செயல்களில் ஈடுபடுவது, மிக மிக கொடூரமான செயல். இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.

தமிழகத்தில் போலீசார் இருக்கிறார்களா? மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறார்களா? திமுக ஆட்சியில் 6,999 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக திமுக அமைச்சர் கூறியிருக்கிறார். அதற்கு ரூ.104 கோடி நிவாரணம் கொடுத்ததாக அறிவித்து இருக்கிறார். பாலியல் வன்கொடுமையை தடுத்து நிறுத்துவதற்கு அரசுக்கு திராணி இல்லை.

தாமதம் ஏன்?



போலீசார் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் அநீதி இழைக்கப்படுகிறது. கடந்த 50 மாதம் திமுக ஆட்சியில், 6,400 கொலைகள் நடந்து இருக்கிறது. இதுவும் மிகவும் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம். ஏன் நிரந்தர டிஜிபி நியமிப்பதில் இவ்வளவு குளறுபடி, பாரபட்சம். அரசுக்கு வேண்டப்பட்டவர் டிஜிபியாக வரவேண்டும் என்பதற்காக தான், இதுவரை அவர்கள் நிரந்தர டிஜிபியை நியமிக்கவில்லை. டிஜிபி ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன், தகுதியானவர்கள் பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.

பதறுகின்றனர்



எஸ்ஐஆர் என்றாலே திமுகவினர் அலறுகின்றனர். பதறுகின்றனர். போலி வாக்காளர்களை நீக்க எஸ்ஐஆர் அவசியம். தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ள வேண்டியது முக்கியம். பணிகளில் தாமதம் ஏற்பட வாய்ப்பே இல்லை. வாக்காளர் படிவங்களை வழங்க 8 நாட்களே போதும்.

முதிர்ந்த அரசியல்வாதிகள் மக்கள் பிரச்னை குறித்து பேச வேண்டும். திமுக தலைவர், உதயநிதி எங்கள் ஆட்சி குறித்து குறை சொல்ல முடிந்ததா?

அதிமுக, பாஜ கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்த பிறகு, உள்துறை அமைச்சர் அமித்ஷா தெளிவுப்படுத்தி விட்டார்.

வேடிக்கையான அரசு




அதிமுக, பாஜ., கூட்டணி அமைத்து உள்ளது. இந்த கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும். அதிமுக தான் ஆட்சி அமைக்கும். எங்களது கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் என தெளிவுப்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் விரோத ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது.


இதனை அகற்ற வேண்டும் என்ற கொந்தளிப்பு உடன் தான் மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கும் முதல்வர், நிதி ஒதுக்காமல் பல திட்டங்களை அறிவிக்கிறார்.இப்படி ஒரு வேடிக்கையான அரசு இந்தியாவிலேயே எங்கேயும் கிடையாது.
இவ்வாறு இபிஎஸ் கூறினார்.

Advertisement