டில்லி சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை வேட்டையாட அமித்ஷா உத்தரவு

10


புதுடில்லி: டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் உள்ள ஒவ்வொரு குற்றவாளியையும் வேட்டையாடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.


தலைநகர் டில்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த சூழலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அவரது இல்லத்தில் உயர்மட்ட பாதுகாப்பு மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன், புலனாய்வுப் பணியகத்தின் இயக்குநர், தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ஜெனரல் மற்றும் டில்லி போலீஸ் கமிஷனர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஜம்மு காஷ்மீர் டிஜிபியும் இந்தக் கூட்டத்தில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக கலந்து கொண்டார்.

இந்த உயர்மட்ட பாதுகாப்பு கூட்டம் குறித்து அமித்ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: டில்லி கார் குண்டுவெடிப்பு குறித்து மூத்த அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கினேன்.


இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள ஒவ்வொரு குற்றவாளியையும் வேட்டையாடுமாறு அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இந்தச் செயலில் ஈடுபட்ட அனைவரும் எங்கள் விசாரணை அமைப்புகளின் முழு கோபத்தையும் எதிர்கொள்வார்கள். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.

நலம் விசாரிப்பு




இதற்கிடையே ஆப்ரிக்க நாடுகளுக்கு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு டில்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து விசாரித்துள்ளார்.


அப்போது, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து திரவுபதி முர்முவிடம் அமித்ஷா விளக்கி உள்ளார் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Advertisement