சூரிய ஒளியில் இயங்கும் வேதியியல் ஆலை

சூரிய ஒளி, தட்டுப்பாடற்ற இலவச ஆற்றல் ஆதாரம். அதை, ஒரு வேதியியல் தொழிற்சாலையாக மாற்றியிருக்கின்றனர் கேம்பிரிட்ஜ் பல்கலை ஆய்வாளர்கள். அவர்கள் வடிவமைத்த, 'பாதி செயற்கை இலை' (semi-artificial leaf), கரியமில வாயுவையும் நீரையும், சூரிய ஒளியைக் கொண்டு, மதிப்புமிக்க மூலக்கூறுகளாக மாற்றுகிறது.

உதாரணமாக, பார்மேட் (formate) போன்ற மூலப் பொருட்களை பாதி செயற்கை இலை உருவாக்குகிறது. எரிபொருட்கள் மற்றும் மருந்துகளை உருவாக்கும் துாய மூலப்பொருளாக இருக்கக்கூடியது பார்மேட். இதை வெறும் சூரிய ஒளி மூலம் உருவாக்க முடியும் என்பது விஞ்ஞானி களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தக் கருவி, வழக்கமான உலோக வினையூக்கிகள் மற்றும் கனிம குறைக் கடத்திகளுக்குப் பதிலாக, ஒளி- உறிஞ்சும் கரிமப் பொருட்களையும் பாக்டீரிய நொதிகளையும் நம்பியுள்ளது.


எனவே, கச்சிதமான, நச்சுத்தன்மையற்ற வேதியியல் உற்பத்தி ஆலையாக இருக்கிறது இந்த 'பாதி செயற்கை இலை.' இது சாதாரண பைகார்பனேட் கரைசலில் இயங்குகிறது. தவிர, இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை ஒளிச்சேர்க்கை கருவிகள் ஒரு நாளுக்கு மேல் வேலை செய்வதில்லை. ஆனால், கேம்பிரிட்ஜ் விஞ்ஞானிகளின் பாதி செயற்கை இலை கருவி, ஒரு நாளுக்கு மேல் தொடர்ந்து இயங்கிக் காட்டியுள்ளது.

முந்தைய செயற்கை- இலை கருவிகள், பெரும்பாலும் ஹைட்ரஜனை மட்டுமே உருவாக்கின. ஆனால், இது சிக்கலான வேதிப்பொருட்களை உருவாக்குகிறது. இதை அப்படியே வளர்த் தெடுத்து, தொழிற்சாலை மட்டத்திற்கு கொண்டுவர முடிந்தால், தொழிற் சாலைகள் முற்றிலும் சூரிய ஒளியின் மூலம், இயங்கி, காற்றிலிருந்து வேதிப் பொருட்களை உறிஞ்சி எடுக்க முடியும்.

Advertisement