கிடப்பில் பஸ் டெப்போ: பயணிகள் தவிப்பு

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் பஸ் டெப்போ அமைக்க விடுக்கப்பட்ட கோரிக்கை கிடப்பில் போடப்படுவதால் பயணிகள் அவதிக்கு ஆளாகின்றனர்.

மாவட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய நகரமான சிங்கம்புணரி, சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான தொழில், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. அனைத்து வசதிகளும் இப்பகுதியில் கிடைப்பதால், இங்கு பணிக்கு வரும் அரசு, தனியார் ஊழியர்கள் இங்கேயே தங்கி விடுகின்றனர். இத்தாலுகா வேகமாக வளர்ந்து வருகிறது. அதேநேரம் பொது போக்குவரத்து முறையாக திட்டமிடல் இல்லாததால் இப்பகுதி பின்தங்கியே உள்ளது.

சிங்கம்புணரியில் இருந்து தொலைதுார நகரங்களுக்கு நேரடி பஸ் வசதி இல்லை. இதனால் வேறு ஊர்களில் புறப்பட்டு இவ்வழியாக செல்லும் பஸ்களில் தான் பயணிகள் செல்கின்றனர். நீண்ட துார பயணிகளுக்கு இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டே செல்ல வேண்டியுள்ளது.

நத்தம், திருப்புத்துார், மதுரை, பொன்னமராவதி அரசு பஸ் டெப்போக்களில் இருந்து இயக்கப்படும் பஸ்களின் ரூட்களை அடிக்கடி மாற்றி சிங்கம்புணரியை புறக்கணிக்கின்றனர். இதை நம்பி காத்திருக்கும் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

எஸ்.புதுார் ஒன்றிய அனைத்து கிராமங்களுக்கும் பஸ் இயக்க முடியாததால் பல மாணவர்கள் கல்வியை பாதியில் கைவிடும் அபாயம் உள்ளது. சிங்கம்புணரியில் தனியாக பஸ் டெப்போ அமைந்தால் மட்டுமே நிரந்தர தீர்வு என்கிறார்கள் பயணிகள்.

Advertisement