விக்சித் பாரத் இலக்கை அடைவதில் முக்கிய பங்காற்றும் சிஏஜி; துணை ஜனாதிபதி பெருமிதம்
புதுடில்லி: விக்சித் பாரத் 2047 என்ற இலக்கை அடைவதில் சிஏஜி முக்கிய பங்காற்றுவதாக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சிஏஜி எனப்படும் இந்திய தணிக்கை மற்றும் பொது கணக்கு ஆய்வாளர் நிறுவனத்தின் 166வது துவக்க தினத்தை முன்னிட்டு, தணிக்கை தினக் கொண்டாட்டத்தை தலைநகர் டில்லியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிஷ்ணன் இன்று துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; நல்ல ஆட்சிக்கு ஒரு வழிகாட்டியாகவும், நிர்வாகக் கணக்காய்வை வலுப்படுத்தும் கருவியாகவும் செயல்படுவதற்காக தணிக்கை செயல்முறைகளை மாற்றியமைக்க, சிஏஜி குறிப்பிடத்தக்க முன்னெடுப்புகளை எடுத்துள்ளது. தணிக்கை என்பது ஒரு பின்நோக்கிய செயல்பாடு அல்ல, மாறாக முன்னோக்கிய சீர்திருத்தம், புத்தாக்கம் ஆகும்.
பொருளாதார, சமூக, தொழில்நுட்ப, சுற்றுச்சூழல் மற்றும் நிறுவனத் துறைகள் அனைத்திலும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடையும் அரசின் பயணத்தில், சிஏஜி. ஒரு நம்பகமான கூட்டாளியாகும். இது விக்சித் பாரத் 2047 நோக்கி நாட்டின் முன்னேற்றத்தை கொண்டு செல்கிறது, இவ்வாறு அவர் கூறினார்.